5 years of Aruvi : அசைத்து பார்த்த அருவி.. 5 வருஷம் கழிச்சு இப்போவும் எல்லாமும் அப்படியே இருக்கா?

ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் நிராகரிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வலியையும், எதிர்பாராத நிகழ்வுகளையும் திரைக்கதையாக காட்சிப்படுத்திய அருவி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

Continues below advertisement
தமிழ் சினிமாவில் பெண்களை மையப்படுத்தி ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் நிராகரிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வலியையும், எதிர்பாராத நிகழ்வுகளையும் திரைக்கதையாக காட்சிப்படுத்தி ஒரு புதுமையாக புரட்சிகரமாக வெளியான திரைப்படம் 'அருவி'. இப்படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகளை கடந்து விட்டாலும் இன்றும் இதன் தனித்துவம் குறையாமல் நிலைத்து நிற்கிறது.    
 
 
 
 பெண் விரும்புவது இதுதான்:
 
இன்று இருக்கும் காலகட்டத்தில் மக்களிடம் மனிதாபிமானத்தை ஏதிர்பாக்க முடியாது என்பதை ஒரு பெண்ணை மையப்படுத்தி மிகவும் அழகாக அதில் அரசியல், வணிகம் கலந்து இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமன் திரைப்படம் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தது சிறப்பு. ஒரு சராசரி பெண்ணின் அதிகபட்ச தேவை என்பது மனதை புரிந்துகொள்ளும் ஒரு கணவன், அன்பான அறிவான குழந்தைகள் என தனக்கு மட்டுமே உரிமையான ஒரு குடும்பம் மட்டுமே. அப்படி அன்பான ஒரு குடும்பத்தில் செல்ல பெண்ணாக இருந்த அருவி சில எதிர்பாராத காரணங்களால் குடும்பத்தை விட்டு வெளியேறி அவள் எப்படி எதிர்காலத்தை எதிர்கொண்டாள் என்பதுதான் படத்தின் மையக்கரு.

சூழ்நிலை கைதிகளா பெண்கள்?
 
நிராகரிக்கப்பட்ட ஒரு பெண் சூழல் கைதியாக இருப்பதன் காரணம் என்ன அவளை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது, அவளின் பாதுகாப்பு என்பது எந்த அளவிற்கு இருக்கும், அவள் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் என்ன, சந்திக்க வேண்டிய சவால்கள் என்ன என்பதை மிகவும் அழகாக வெளிப்படுத்தி ஒரு பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை மீறினால் அவளின் நிலைமை என்ன என்பதை பளிச்சென படம் பிடித்து காட்டி விட்டார் இயக்குநர். இயக்குநர் சொல்ல வந்த கருத்தை தனது அபாரமான நடிப்பால் உயிர் கொடுத்து மெய்சிலிர்க்க வைத்தார் நடிகை அதிதி பாலன். இப்படத்திற்காக ரசிகர்கள் மட்டுமின்றி திரை விமர்சகர்களும் அதிதியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர்.

சமூகம் மீது இருக்கும் கோபத்தின் வெளிப்பாடு: 

இங்கு பணம் தான் எல்லாமே என்ற வசனம் இன்றைய உலகின் பிரதிபலிப்பு. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அருவி கலந்து கொண்டு அங்கு பேசும் வசனங்கள் ஒவ்வொன்று நெற்றியில் அடித்தார் போல் சமூகம் மேல் அவளுக்கு இருக்கும் கோபத்தின் வெளிப்பாடாக இருந்தது. பார்ப்போரின் கவனத்தை சற்றும் சிதறவிடாமல் அனைவரின் கவனத்தை ஈர்த்து புருவங்களை உயர்த்த செய்தன. ஒரு பெண்ணாக அவளுக்கு நேர்ந்த துயரங்கள் இனி யாரும் அனுபவிக்கக் கூடாது என்ற எண்ணம் படம் பார்த்த அனைவருக்கும் வந்திருக்கும். ஒவ்வொரு காட்சிகளும் நம் மனதுக்கு நெருக்கமாக கொண்டு சென்ற ஒளிப்பதிவாளர் பாராட்டுகளை குவித்தார்.

படத்தை சுமந்த நாயகி :
அறிமுக நாயகியா இவர் என அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு இருந்தது அதிதி பாலனின் அபாரமான நடிப்பு. அமைதியான முகம், அளவான நடிப்பு, தகுந்த உடல் மொழி, அழுத்தமான வசன உச்சரிப்பு என முழுமையான பங்களிப்பை கொடுத்து அருவியாவே வாழ்ந்து மொத்த திரைப்படத்தையும் தனது தோள் மீது சுமந்து சென்றார் அதிதி பாலன்.  அவசரம் இல்லாமல், பதறாமல், நிதானமாக தான் நினைத்த விஷயங்களை மிகவும் நேர்த்தியாக தமிழ் சினிமா சொல்ல நினைத்து சொல்லாமல் இருந்த பல விஷயங்களை உருக்கமாக இருந்தாலும் உரக்கச் சொல்லிய படம் 'அருவி'.  
Continues below advertisement
Sponsored Links by Taboola