சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கும் படம் அவதார் தி வே ஆஃப் வாட்டர். 2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் படத்தின் தொடர்ச்சிக் கதையாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் 13 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தனர். சுமார் 250 மில்லியனிற்கும் மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட அவதார்-2 வெளியாகி வசூலைக் குவித்து வந்தாலும், “என்னதான் இருந்தாலும் முதல் பாகம் அளவிற்கு இல்லப்பா..” என்று ரசிகர்கள் குமுறத்தான் செய்கின்றனர்.


அவதாரின் முதல் பாகம் இவ்வளவு ஸ்பெஷலாக ரசிகர்களின் மனதில் இடம் பெற்றதற்கு காரணம், இப்படத்திற்காக செலவு செய்யப்பட்ட வருடங்களும் பல கலைஞர்களின் மெனக்கெடலும்தான்.  இதனால்தான் எத்தனை முறை பார்த்தாலும் புது வித அனுபவத்தை தருகிறது அவதார். இப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் பல தற்போது இணையத்தில் உலா வருகின்றன. அதில் சிலவற்றை இங்கே படிக்கலாம் வாங்க..




ஐம்டிபியின் தரவுகள் படி, அவதார் படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்



  • அவதாரின் ஹீரோ ஜேக் சல்லியாக நடித்த சாம் வர்திங்டன் இப்படத்திற்காக ஆடிஷனிற்கு வந்த போது, தங்க இடம் இன்றி தனது காரில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தாராம்.

  • பாண்டோராவில் வாழும் நாவி மக்கள் பேசும் மொழியை இப்படத்திற்காகவே உருவாக்கி, அதற்காக ஒரு இணையதளத்தையும் உருவாக்கியிருந்தார்கள். இதை பயன்படுத்தும் அவதார் நடிகர்கள் நாவி மொழியினை படத்திற்காக கற்றுக் கொண்டனர். இம்மொழியில் மொத்தம் 1000 வார்த்தைகள் உள்ளன. 

  • அவதாரின் ஹீரோ சாம் வர்திங்டன், “அமெரிக்கர்களைப் போல ஆங்கிலம் பேசுவதை விட, நாவியை கற்றுக்கொண்டது சுலபமாக இருந்தது” என ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். 

  • டைட்டானிற்கு முன்னரே எழுதப்பட்ட கதைதான் அவதார். 1999ஆம் ஆண்டே அவதார் படத்திற்கான பணிகள் தொடங்கப்பட இருந்தன. ஆனால், அந்த அளவிற்கான தொழில் நுட்பங்கள் அப்போது கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததால், இப்படத்திற்கான பணிகள் 8 ஆண்டுகளுக்கு கிடப்பில் போடப்பட்டிருந்தன. 





  • அவதார் படத்தின் கதை முன்னரே தயாராக இருந்தாலும், இப்படத்தின் வேலையை முடிக்க 4 வருடங்கள் தேவைப்பட்டன.

  • அவதாரில் படத்தில் கேட்கப்படும் மிருகங்களின் ஓசைகள், ஜூராசிக் பார்க்(1993) படத்தில் இடம் பெற்ற டைனோசர்கள் குரல்களில் ரீ-கிரியேஷன் ஆகும். அதிலும் குறிப்பாக டி ரெக்ஸ் மற்றும் ராப்டர்ஸின் குரல்களைதான் அதிகம் அவதாரில் உபயோகப்படுத்தியுள்ளனர்.

  • இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், படப்பிடிப்பு தளங்களில் மிகவும் கண்டிப்புடன் இருப்பாராம். ஷூட்டிங்கின் போது யாருடைய தொலைப்போசியாவது ரிங் ஆனால், அதை இவர் உடைத்து விடுவார் என சொல்லப்படுகிறது. ஆனால், செல்போனை உடைத்துவிடுவேன் என பயமுறத்த மட்டும்தான் செய்திருக்கிறேன் என ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார் ஜேம்ஸ். 

  • அவதார் பட நடிகர்களை ஒருமுறை ஹவாய்க்கு அழைத்து சென்றுள்ளார் ஜேம்ஸ் கேமரூன். சுற்றுலாவிற்காக அல்ல, அவர்களுக்கு உண்மையான காட்டின் அனுபத்தை தருவதற்காக.  பாண்டோராவில் எனும் காட்டுப்பகுதியில் நாவி மக்கள் வாழ்வதாகத்தான் அவதார் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இதற்கு தயார் படுத்துவதற்காகத்தான் அனைவரையும் ஹவாயக்கு அழைத்துச் சென்றுள்ளார் ஜேம்ஸ். இப்பயணத்தின்போது, காட்டுக்குள் நடிகர்கள் அனைவரும் பகல் நேரங்களில் உலா வருவார்களாம்.

  • பிரபல ஹாலிவுட் நடிகர்களான ஜேக் கில்லன்ஹால் மற்றும் மேட் டேமனைத்தான் அவதார் படத்தின் ஹீரோவாக ஆக்க வேண்டும் என்று படக்குழு முடிவு செய்திருந்தனர். ஆனால், ஜேம்ஸ் கேமரூனிற்கு புது முகம் தேவைப்பட்டதால் சாம் வர்திங்டனை தேர்வு செய்தனர்.

  • பாண்டோராவில் வாழ்ந்து வருவதாக கூறப்படும் மிருகங்களுக்கு வெறும் ஆறு எலும்புகள் மட்டுமே இருக்குமாம். 

  • நாவி மனிதர்களை நீள நிறத்தில் காண்பித்திருப்பார் ஜேம்ஸ் கேமரூன். இதற்கு காரணமாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இந்து கடவுளகளான ராமர், கிருஷ்ணர் உள்ளிட்டோரால் ஈர்க்கப்பட்டு நீள நிறத்தினை நிறத்தை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது. 


இப்படி பல்வேறு ஆச்சரித்திற்குரிய அம்சங்களை அடக்கிய அவதார் படம் வெளியாகி 13 ஆண்டுகள் கடந்துள்ளது. அதை நினைவுப் படுத்தும் வகையில், ரசிகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ் அப்லோட் செய்து வருகின்றனர்.