விழுப்புரம் : வாக்கு வங்கியே இல்லாத ஜிகே வாசன், டி.டி.வி தினகரனுக்கு சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம் வி.சி.க.விற்கு ஏன் ஒதுக்கவில்லை? தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கும் அமமுகவிற்கும் என்ன தகுதி உள்ளது என காட்டமாக அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார். 

வி.சி.க.விற்கு சின்னம் ஒதுக்க ஏன் தாமதம்?


விழுப்புரம் மாவட்டம் விக்கிராவண்டி அருகேயுள்ள வி.சாலையில் வருகின்ற 5 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விழுப்புரம் தனி தொகுதியில் போட்டியிடும் வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் பேச உள்ளார். இதனை முன்னிட்டு பொதுகூட்ட மேடை அமைக்கும் பகுதியினை அமைச்சர் பொன்முடி திமுக எம்.எல்.ஏ. லட்சுமணன் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

 

அதனைத்தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை மக்கள் பார்த்து கொண்டு தான் இருப்பதாகவும், நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டுள்ள வி.சி.க.விற்கு சின்னம் ஒதுக்க தாமதபடுத்துவதேன்? என கேள்வி எழுப்பினார்.

வாக்குவங்கியே இல்லாதவர்களுக்கு சின்னம்:


மேலும் வாக்கு வங்கியே இல்லாத தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னமும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னமும் ஒதுக்கிய தேர்தல் ஆணையம் ஏன் வி.சி.க.விற்கு ஒதுக்கவில்லை தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கும், அ.ம.மு.க.விற்கும் என்ன தகுதி உள்ளது? என காட்டமாக அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.

 

ஏப்ரல் 19 ஆம் தேதி மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்து ஜூன் 4 ஆம் தேதி அதனை கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் அன்று வெற்றியாக சமர்ப்பிப்பார்கள் என பொன்முடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.