மதுரையை நிரந்தரமாக ஆட்சி செய்யும் மீனாட்சியின் பார்வையில் மதுரை மாநகராட்சியில் மேயராக பெண் பதவி வகிக்க உள்ளனர் என  பலரும் பெருமை கொள்கின்றனர். மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சியும், மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய மூன்று நகராட்சியும். அ.வல்லாளபட்டி, அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட 9 பேரூராட்சிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. மாநகராட்சியில் மேயர் பதவிக்கு பெண் வேட்பாளர் என்பதால் அதிகளவு பெண்கள் போட்டியிடுகின்றனர். இளம் பெண்கள், பட்டதாரிகள், திருநங்கைகள் போட்டிக்களத்தில் அதிகளவு உள்ளனர். மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள் என 6 பொறுப்புகளுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.



100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் தி.மு.க 77- இடங்களில் நேரடியாக களம் காண்கிறது. தி.மு.கவில்  தோழமை கட்சிகள் நிற்கும் பல இடங்கள் தி.மு.க ஆதரவாளர்கள் பலர் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். இதனால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் வெற்றியை சற்று சவலாக்குகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி மிகக்குறைந்த இடங்களில் மட்டும் தான் வெற்றியடையும் என சொல்லப்படுகிறது.  மேயர் பதவி தலையீட்டில் அமைச்சர் பி.டி.ஆர்  பழனிவேல் தியாகராஜன் தலையீடு அதிகளவு இருக்கும் என்பதால், துணை மேயர் பதவிக்கு அமைச்சர் பி.மூர்த்தி சொல்லும் ஆட்களை தான் போடப்படும்  என சொல்லப்படுகிறது. மேயர் பதவி பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கண்ரோல் என்பதால் முக்குலத்தோரில் யாருக்கும் மேயர் பதவி வழங்கப்படாதாம். மதுரை தி.மு.க.,வில் பல்வேறு பதவிகளில் முக்குலத்தோர் அதிக அளவில் இருப்பதால் மேயர் பதவி முக்குலத்தோருக்கு எட்டாக் கனியாக இருக்கும்.

 



 

எனினும் எப்படியாவது மேயர் பதவியை வாங்கிவிட வேண்டும் என பெண் வேட்பாளர்களின் நெருக்கமானவர்கள் முயற்சித்து வருகின்றனர். வாசுகி சசிக்குமார், பாமா முருகன், ரோஹினி பொம்மதேவன், விஜய மெளசினி, செல்வி, இந்திராணி உள்ளிட்ட பலரும் ரேஸில் உள்ளனர். துணை மேயருக்கு ஜெயராமன், சின்னசாமி உள்ளிட்ட வேட்பாளர்களின் பட்டியல் வாசிக்கப்படுகிறது. அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது ஆதரவாளரான முன்னாள் கவுன்சிலர் சண்முகவள்ளிக்கும், முன்னாள் மேயரும் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான ராஜன்செல்லப்பா தனது ஆதரவாளரான சண்முகப்பிரியா ஹோசிமினுக்கும் சீட் வாங்கி கொடுத்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே அவர்கள் வெற்றி பெற்று வந்தால் இவர்கள்தான் மேயர் வேட்பாளர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் அ.தி.மு.க. 30க்கும் அதிகமான சீட்டுகளை பெறும் என உளவுத் துறை அறிக்கை கொடுத்துள்ளது.



 

ஒருவேளை மெஜாரிட்டி எண்ணிக்கையை அ.தி.மு.க பெறவில்லை என்றால் உளவுத்துறை ரிப்போர்ட்  படி 30-க்கு மேல் சீட்டுகளை  அ.தி.மு.க பெற்று ,  சுயேச்சையாக வெற்றி பெறும்சிலரும், பா.ஜ.கவில் வெற்றி பெறுபவர்களும் இணைந்து துணை மேயரை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என கூறப்படுகிறது . இந்த ரேஸில் 32 வது வார்டில் போட்டியிடும் மாவட்ட மகளிரணி செயலாளராக உள்ள சுகந்தி அசோக்கும் உள்ளார் என்று கூறப்படுகிறது.



 

அதே போல், 64 வது வார்டில் போட்டியிடும் சோலைராஜாவிற்கு துணை மேயர் பதவி வழங்கப்படும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் மண்டல தலைவராக இருந்து மீண்டும் 16- வது வார்டில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ள ஜெய வேலும், துணை மேயர் பதவிக்கு போட்டியிடுவார் என கூறப்படுகிறது. மேலும் முதலில் செல்லூர் ராஜூவால் மறுதலிக்கப்பட்டு, தற்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். வரை சென்று சீட் பெற்று வந்த சாலை முத்துவும் துணை மேயர் ரேஸில் வருவார் என தெரிகிறது. மேலும் இந்த முறை மதுரை மாநகராட்சியில் சுயேட்சை வேட்பாளர்கள் 10க்கும் மேற்பட்ட சீட்டுகளை பிடிப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் மதுரை மாநகராட்சி வார்டு ரேஸ் சூடுபறக்கிறது.



 

100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் தற்போதைய நிலவரப்படி தி.மு.க கூட்டணி 70 இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதால், தி.மு.க.,விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மேயர் வேட்பாளர் யார் என்று தெரிந்துவிட்டால் உள்ளடி வேலைகள் நடைபெறும் என்பதால் தேர்தல் வெற்றிக்கு பின் முடிவு செய்துகொள்ளலாம் என முடிவில் இருப்பதாக உடன் பிறப்புகள் நம்மிடம் உறுதிபட தெரிவித்தனர்.