விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று பாமக சார்பில் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் (பொறுப்பு) ஆறுமுகத்திடம், பாமக வழக்கறிஞர் பாலு மற்றும் நிர்வாகிகள் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.


கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர்  உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, போட்டியிட விரும்புவோர் கடந்த 14ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரையில், வேட்புமனு தாக்கல் செய்யதனர். மொத்தம் 56 வேட்பாளர்கள் சார்பில்  64 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் மீது பரிசீலனையின் முடிவில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 29 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் பாலு... விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அலுவலகத்தில் புகார்களை பெறுவதற்கு உரிய அதிகாரிகள் இல்லை. இந்த தேர்தலில் ஆளும் திமுக, பல்வேறு தில்லுமுல்லுகளை, விதி மீறல்களை செய்யத் திட்டமிட்டு வருகிறது. வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தொகுதியில் தேர்தல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


வேட்பாளர் பட்டியல் வெளியிட்டபோது, சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. அப்போது அதிகாரியை அமைச்சர் ஒருவர் மிரட்டியதால், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு நேற்று அலுவலகத்துக்கு வரவில்லை. விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர் பட்டியலில், இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்களது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.


கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் இருந்தன. எனவே, இறந்தவர்கள் பெயர்களை நீக்கி, அந்தப் பெயர்களை ஒவ்வொரு வாக்குசாவடியிலும் ஒட்ட வேண்டும். இந்த இடைத்தேர்தலில் திமுகவினர் கள்ள வாக்கு பதிவு செய்ய வாய்ப்புகள் உள்ளன. நியாயமான, நேர்மையான முறையில் தேர்தலை நடத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.


இது தொடர்பாக தேர்தல் பார்வையாளர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் டெல்லி தேர்தல் ஆணையத்துக்கு புகார்களை அனுப்பிவைப்போம். இறந்துபோன 15,000 வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்காவிட்டால், எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை கடுமையாக இருக்கும் என வழக்கறிஞர் பாலு கூறினார்.