விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியது. இடைத்தேர்தலில் டெபாசிட் தொகைக்கு சில்லரை காசுகள், பணமாலை அணிந்துகொண்டும், டிஜிட்டல் மையத்தை வலியுறுத்தி கிரிடிட் கார்டுகள் ஏடிஎம் கார்டுகளை மாலையாக அணிந்து கொண்டு வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். 


விழுப்புரம் மாவட்டம் பிடாகத்தை அடுத்த அத்தியூர் திருவாதி கிராமத்தை சேர்ந்தவர் நா.புகழேந்தி. விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.


இதையடுத்து அந்த சட்டமன்ற தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.


வேட்புமனு தாக்கல் 


இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் ஜூன் 14 தொடங்கியது. வரும் 21-ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 24ம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்ப பெற வரும் 26ம் தேதி கடைசி நாளாகும். அன்றே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, ஜூலை 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, வட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்தல் ஆணையம் கண்காணிப்பில் உள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகிறார்.


முதல்நாள் வேட்பு மனு தாக்கல் 


முதல் நாளிலேயே வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வருகை புரிந்தனர். வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்தவர்கள் பணமாலைகளை அணிந்தும், டெபாசிட் தொகையை சில்லரையாக வழங்கியும், கிரிடிட் கார்டு, ஏடிஎம் கார்டு போன்றவைகளை மாலையாக அணிந்து கொண்டு வந்து மனுத்தாக்கல் செய்தனர். இதனால், இடைத்தேர்தலுக்கான முதல் நாள் வேட்பு மனுதாக்கல் களைகட்டியுள்ளது. 

அக்னி ஆழ்வார் 


தருமபுரி மாவட்டம் நாகமறை அக்னி ஆழ்வார் என்பவர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய வருகை புரிந்தவர் 51 வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். ஊழலை ஒழிக்க 50 ரொக்க பணத்தை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டு  வன்னியர் சமூக மக்களுக்கு 10.5 சதவிகித இடஒதுகீடு வாங்கி தர விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அக்னி ஆழ்வார் தெரிவித்துள்ளார். 

 

ராஜேந்திரன் (முன்னாள் போக்குவரத்து ஊழியர் )


தமிழக அரசும் போக்குவரத்து துறையும் டிஜிட்டல் மையத்திற்கு  வர வேண்டும் என்பதை வலியுறுத்தி கிரிட்டிட் கார்டு ஏடிஎம் கார்டு பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி  திருச்சியை ஒறையூரை சார்ந்த  முன்னாள் போக்குவரத்து ஊழியர் ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார். டிஜிட்டல் கார்டு மூலம் பணம் செலுத்த அதிகாரிகள் ஏற்காததால் இறுதியாக ரொக்க பணத்தை கொடுத்தால் ஏற்போம் என கூறியதால் டிஜிட்டல் முறையில் மட்டுமே பணம் செலுத்துவேன் என கூறிவிட்டு டெபாசிட் தொகை கட்டாமல்  மனுதாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தார். 

தேர்தல் மன்னன் பத்மராஜன்


 

தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் சேலம் மேட்டூரை சார்ந்த பத்மராஜன் என்பவர் 242 முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். 1988 ஆம் ஆண்டு முதல் மனு தாக்கல் செய்து வரும் மனு தாக்கலுக்கு மட்டுமே இதுவரை ஒரு கோடி செலவு செய்துள்ளதாகவும் வெற்றியே கானாத தான் தோல்வியை மட்டுமே சந்தித்து வருவதால் மனம் தளராமல் மனு தாக்கல் செய்து வருவதாக பத்மராஜன் கூறியுள்ளார்.