தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் ஆர்வமாக வாக்களித்து வந்தனர். மாலை 5 மணியுடன் பொதுமக்களின் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.  5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. 


இந்நிலையில் தற்போது உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 3 மணி நிலவரப்படி 47.18% வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னை மாநகராட்சியில் குறைந்த அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 3 மணி நேர நிலவரப்படி 31.8% வாக்குகள் சென்னையில் பதிவாகியுள்ளது. 


கோவை மாவட்டத்தில் 46.52% வாக்குகளும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 54.15% வாக்குகளும் திருச்சியில் 57.09% வாக்குகளும் பதிவாகின. விழுப்புரத்தில் 60.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மதுரை மாவட்டத்தில் 42.70% வாக்குகளும் பதிவாகின.


புதுக்கோட்டையில் 57.37% வாக்குகளும் மயிலாடுதுறையில் 51.97% வாக்குகளும் பதிவாகின. திருவண்ணாமலையில் 54.81%, ராமநாதபுரத்தில் 52.46%, கன்னியாகுமரியில் 50.44%, பெரம்பலூரில் 55.58% பதிவானது. திருவாரூர் மாவட்டத்தில் 3 மணி நிலவரப்படி 56.2 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. செங்கல்பட்டில் 37.99%, சேலத்தில் 56.37%, சிவகங்கையில் 52.95 % வாக்குகள் பதிவாகின. தேனியில் 55.71 % வாக்குகளும், அரியலூரில் 62.34 % வாக்குகளும் பதிவாகின. தூத்துக்குடியில் 49.35 % வாக்குகள் பதிவாகின. அதேபோலத் தென்காசியில் 58.05%, கள்ளக்குறிச்சி 61.07% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக  தருமபுரி மாவட்டத்தில் 65.68 % வாக்குகள் பதிவாகின. 




தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு இன்று தேர்தல் நடைபெற்றது.  மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.


 


இதற்காக தமிழ்நாட்டு முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டது. சென்னையில் மூவர் உட்பட 38 மாவட்டங்களில் மொத்தம் 41 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடப்படுத்தப்பட்டுள்ளனர். கோவையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண