தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில்  ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான  முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் காலை முதல் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து  வருகின்றனர்.


காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 7 மணிக்கு தொடங்கியுள்ள உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 9 மாவட்டத்தில் 39 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 1,577 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.  மேலும், 9 மாவட்டங்களிலும் உள்ள 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 3,346 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வான நிலையில் 80,819 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் ஒன்றியங்களுக்கு சுற்றுப்பகுதியில் 5 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகள்  மூடப்பட்டது.


7 முனைப்போட்டி


 இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் 7 முனைப்போட்டி நிலவுகிறது. பாட்டாள் மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக, தேதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.


7,721 மையங்களில் 41, 93,996 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க கடைசி ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


எந்தெந்த ஒன்றியங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு? 


செங்கல்பட்டு: இலத்தூர், செயின்ட்தாமஸ் மவுன்ட், திருக்கழுகுன்றம், திருப்போரூர். 


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத்.


விழுப்புரம்: செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவண்டி.


கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம், திருநாவலூர், திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை.


வேலூர்: குடியாத்தம், கீ.வ.குப்பம், காட்பாடி, பேர்ணாம்பட்டு.


ராணிப்பேட்டை: ஆற்காடு, திமிரி, வாலாஜா.


திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர். 


நெல்லை: அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி.


தென்காசி: ஆலங்குளம், கடையம், கீழ்ப்பாவூர், மேலநீலிதநல்லூர்.