பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு இரு தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய்க்கு சவாலளிக்கும் வகையில் அவரது பெயரில் பல்வேறு சுயேட்சை வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். 

Continues below advertisement

இரு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். கடந்த மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நாளில் அவர் பெரம்பூர் தொகுதியிலும், தொடர்ந்து ஏப்ரல் இரண்டாம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியிலும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. அதன்படி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 7600 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு ஏப்ரல் 9ம் தேதி கடைசி நாள் என்ற நிலையில் அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. ஏப்ரல் 23ஆம் தேதி வியாழக்கிழமை ஒரே கட்டமாக தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

Continues below advertisement

ஜோசப் விஜய் பெயரில் இத்தனை வேட்பாளர்களா?

பொதுவாக சட்டமன்றத் தேர்தல் தொடங்கி உள்ளாட்சித் தேர்தல் வரை போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தங்களுக்கு சவாலாக திகழ்வார்கள் என்றால் பிற கட்சிகள் எதிர்க்கட்சி வேட்பாளரின் பெயரில் சுயேட்சை வேட்பாளர்களை களம் இறக்குவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் ஜோசப் மற்றும் விஜய் என்கிற பெயரில் சிலர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி எம்.ஜோசப், எஸ்.ஜோசப், கே.விஜய், ஜி.விஜய் ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர். பெரம்பூர் தொகுதியில் மட்டும் 66 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கின்றனர். சென்னையில் பெரம்பூர் தொகுதியில் தான் அதிக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.  அதே சமயம் திருச்சி கிழக்கு தொகுதியில் கே.விஜய் என்ற சுயேட்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த தொகுதியில் 39 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

இதேபோல் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் பெயரின் பல்வேறு சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. உதாரணமாக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் ஆர்.எஸ்.முருகன் பெயரில் பி.முருகன், எஸ் முருகன் பெயரில் இரண்டு பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். எனினும் வேட்புமனு பரிசீலனையில் சிலரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடும்போது ஒரே பெயரில் எத்தனை பெயர் போட்டி என்பது தெரிய வரும்.