2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகம் 2 இடங்களில் வேட்பாளர்களை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Continues below advertisement

சட்டமன்ற தேர்தலில் தவெக

வரும் ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. இதில் புதிதாக களம் கண்டுள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பெரும் எதிர்பார்ப்பிற்குரிய கட்சியாக மாறியுள்ளது. அந்த கட்சிக்கு இந்த தேர்தலில் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய பல்வேறு கருத்து கணிப்புகளில் கண்டிப்பாக தவெகவுக்கு மிகப்பெரிய வாக்கு வங்கி இருப்பது நிரூபணமாகும் என சொல்லப்படுகிறது. 

தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது. இதில் அக்கட்சி தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் இரண்டு தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தவெகவின் மற்ற வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. 

Continues below advertisement

கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட வேட்பாளர்கள்

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டிருக்கின்றனர். ஒசூர் மற்றும் ஊத்தங்கரை தொகுதிகளுக்கான புதிய வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. ஊத்தங்கரையில் முதலில் அறிவிக்கப்பட்ட குமரவேல் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் தவெகவில் சேர்ந்த இளையராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்ட குமரவேலுவும்  சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஓசூரில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அம்ரீஸ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் வேந்தர்கரசன் வேட்பாளராக மனு தாக்கல் செய்ததாக சொல்லப்பட்டிருக்கிறது.ஏற்கனவே அந்த கட்சியில் மாற்றுக் கட்சியில் இருந்து வந்த 106 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது கட்சி தொண்டர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியிருந்த நிலையில் தற்போது ஊத்தங்கரை தொகுதியிலும் முன்னாள் அதிமுக பிரமுகரே தவெக வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். 

விஜய் பரப்புரையில் தொடரும் தடை 

இதனிடையே தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால் அவருக்கு காவல்துறை தரப்பில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. சென்னையில் ஒரு மணி நேரம் மட்டுமே சம்பந்தப்பட்ட தொகுதிகளில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதை காரணம் காட்டி விஜய் தேர்தல் பரப்புரையை ரத்து செய்திருக்கிறார். விஜயின் அடுத்த பரப்புரை திருநெல்வேலியில் ஏப்ரல் 8ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.