தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் என்றாலே எப்போதும் பரபரப்பும் விறுவிறுப்பும் இருந்து கொண்டே இருக்கும். முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தல் தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

Continues below advertisement

நான்கு முனைப்போட்டி:

பலமிகுந்த திமுக கூட்டணி, மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க துடிக்கும் அதிமுக கூட்டணி, தனித்தே போட்டியிட்டு வாக்கு வங்கியை அதிகரித்துக் கொண்டுள்ள நாம் தமிழர் மற்றும் புதியதாக அரசியல் களத்தில் குதித்துள்ள விஜய்யின் தவெக என நான்கு முனைப்போட்டியால் இந்த தேர்தல் மிகப்பெரிய கவனிப்பை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் 10 நாட்கள்:

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 10 நாட்களே இருக்கிறது. வாக்குப்பதிவு 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை செய்ய 21ம் தேதி வரை மட்டுமே அனுமதி ஆகும். இதனால், தேர்தல் பரப்புரைக்கு இன்னும் தமிழ்நாட்டில் 8 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

Continues below advertisement

அனல் பறக்கும் பரப்புரை:

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே தீவிர பரப்புரையில் ஒவ்வொரு கட்சிகளும் ஈடுபட்டு வரும் சூழலில் பரப்புரைக்கு முழுமையாக இந்த ஒரு வாரம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. இதனால், அரசியல் கட்சிகள் அனல் பறக்க பரப்புரை செய்ய முடிவு செய்துள்ளன. 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் ஆகிய முதலைமச்சர் வேட்பாளர்களும், கூட்டணி கட்சித் தலைவர்களான திருமாவளவன், அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், அண்ணாமலை, தமிழிசை செளந்தர்ராஜன், செல்வப்பெருந்தகை என அவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விசித்திரமான முறையில் வாக்கு சேகரிப்பு:

இவர்கள் மட்டுமின்றி ஒவ்வொரு கட்சியின் வேட்பாளர்களும் காலை முதல் மாலை வரை மிகவும் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்கள் மக்களின் வாக்குகளை கவர்வதற்காக டீ கடைகளில் டீ குடித்தும், வாக்காளர்களின் கால்களில் விழுந்தும், பஜ்ஜி போண்டா சுட்டும், ஆட்டோ ஓட்டியும், சைக்கிள் ஓட்டியும் என பல விசித்திரமான முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர். 

இதுதவிர ஒவ்வொரு கட்சியின் சின்னங்களும், ஸ்டிக்கர்களும் ஆங்காங்கே சுவர்களில் ஒட்டப்பட்டும், வரையப்பட்டும் வருகிறது. காலை தொடங்கி இரவு வரை வேட்பாளர்கள் வாக்குகளைச் சேகரிக்க சுற்றி சுற்றி வருகின்றனர். தங்களது தலைவர்களின் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொரு கட்சியினரும் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து ஒலி பரப்பி பகுதிகளில் சுற்றிவருகின்றனர்.  இதுதவிர, தங்களது அரசியல் கட்சித் தலைவர்களைப் போன்ற தோற்றம் கொண்ட நபர்களுக்கு வேடமிட்டு பொதுமக்கள் மத்தியில் வேட்பாளர்கள் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.