விழுப்புரம் :அதிமுக கூட்டணி என்பது டெல்லி கூட்டணியாகவும் அமித்ஷா கூட்டணியாக இங்கே இருப்பதாகவும், அவர்கள் கூட்டணி 234 தொகுதிகளில் ஒன்றிலாவது வெற்றி பெறுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளர் கௌதம சிகாமணியை அறிமுகப்படுத்தும் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் உற்சாகமாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி, எதிர்க்கட்சிக் கூட்டணியைக் கடுமையாகச் சாடிப் பேசினார்.

Continues below advertisement

"ஒரே ஒரு தொகுதியிலாவது ஜெயிப்பார்களா?" - பொன்முடி கேள்வி

கூட்டத்தில் பேசிய பொன்முடி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டியதுடன், எதிர்க்கட்சிக் கூட்டணியின் நிலை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசியதாவது:

"தமிழகத்தில் தற்போது இருப்பது அதிமுக கூட்டணி அல்ல; அது டெல்லி கூட்டணி, அமித்ஷா கூட்டணி. இந்த அந்நியக் கூட்டணி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியிலாவது வெற்றி பெறுமா என்பதே பெரிய கேள்விக்குறிதான். மதம், ஜாதி கடந்து நாம் அனைவரும் திராவிடர்கள் என்ற உணர்வோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் தொகுதியாகத் திருக்கோவிலூரை மக்கள் மாற்றிக் காட்ட வேண்டும்."

மேலும், திமுகவினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், யாராலும் நம்மை வீழ்த்த முடியாது என்றும் அவர் தொண்டர்களுக்குக் கட்டளையிட்டார்.

"இது கொள்கை கூட்டணி; அது கொள்ளை கூட்டணி" - கௌதம சிகாமணி சாடல்

திருக்கோவிலூர் தொகுதி வேட்பாளர் கௌதம சிகாமணி பேசுகையில், தற்போதைய கூட்டணியின் பலத்தை வியந்து பாராட்டினார். அவர் கூறியதாவது:

"வலுவான இந்தத் திராவிடக் கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது, வெற்றிக் கோட்டையை உறுதி செய்துள்ளது. 'இப்படை தோற்பின் எப்படை வெல்லும்' என்பதற்கு ஏற்ப நமது வெற்றி உறுதியானது. திமுக தலைமையிலான கூட்டணி என்பது கொள்கைக்காகவும், மதச்சார்பின்மைக்காகவும் உருவானது. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது வெறும் கொள்ளைக் கூட்டணி மட்டுமே."

மேலும், தான் கள்ளக்குறிச்சி எம்.பி-யாக இருந்தபோது திருமாவளவனுடன் இணைந்து பணியாற்றியதை நினைவுகூர்ந்த அவர், தற்போது சட்டமன்றத் தேர்தலிலும் இருவரும் போட்டியிடுவதால், இருவரும் கண்டிப்பாகச் சட்டமன்றத்திற்குள் நுழைவோம் எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மயில் தொகுதி தேமுதிக வேட்பாளர் வெங்கடேசன் மற்றும் திமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.