உள்ளாட்சித் தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்காததால் அவ்விதிமுறைகள் அமலில் நீடிக்கும். நீதிமன்ற உத்தரவின்றி எவ்வித நீக்கமும் தேர்தல் அறிவிப்பில் தேர்தல் ஆணையத்தால் செய்ய முடியாது என்று மாநிலத் தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை கடந்த மாதம் 22ஆம் தேதி மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.


தேர்தலில் வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதாகக் கூறி சுயேச்சை எம்எல்ஏ பிரகாஷ்குமார் உட்பட 3 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து முதல்கட்ட வேட்புமனு தாக்கலான 30 ஆம் தேதி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. குளறுபடிகளை சரி செய்து புதிய அறிவிப்பை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மாநிலத் தேர்தல் ஆணையம் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து 2வது முறையாகத் தேர்தல் தேதியை அறிவித்தது. இது அரசியல் கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் ஆளுநர் தமிழிசையைச் சந்தித்து புகார் தெரிவித்தனர். எதிர்க்கட்சிகள் பந்த் போராட்டமும் நடத்தினர்.



திமுக மாநில அமைப்பாளர் சிவா, இட ஒதுக்கீடு ரத்து அறிவிப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து 21 ஆம் தேதி வரை தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டாலும், நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் உள்ளன. மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியுள்ளதால் தேர்தல் நன்னடத்தை விதிகளைத் தளர்த்த கோரி ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், கூட்டணி கட்சியான பாஜக, எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ், சுயேச்சை மற்றும் நியமன எம்எல்ஏக்கள் அடங்கிய அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் மாநிலத் தேர்தல் ஆணையரிடம் கடந்த 13 ஆம் தேதி மனு அளித்தனர்.


இந்த நிலையில் இம்மனு தொடர்பாக அவர்களுக்கு தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் இன்று அளித்துள்ள பதில் விவரம்: பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு என்பது அரசின் கொள்கை முடிவாகும். இதில் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு எந்தப் பங்கும் இல்லை. மாநிலத் தேர்தல் ஆணையமானது, சம்பந்தப்பட்ட சட்டம் மற்றும் விதிகளின் கீழ் அங்கு அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.


உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களின் வழிகாட்டுதல்களின் படி காலக்கெடுவிற்குள் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். தேர்தல் நன்னடத்தை விதிகள் தடை விதிக்கப்படாததால், நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். தேர்தல் அறிவிப்பில் எந்த நீக்கமும் நீதிமன்ற உத்தரவின்றிச் செய்ய முடியாது. என தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் தெரிவித்துள்ளார்.