சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக புறநகர் கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பாட்டாளி மக்கள் கட்சி வேடந்தாங்கல் பறவை போல் அடிக்கடி கூட்டணி மாற்றிக் கொண்டுள்ளனர். ஏரியில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது பறவைகள் வரும்; தண்ணீர் வற்றினால் சென்றுவிடும். ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி மாறிக்கொண்டிருக்கும் அந்த கட்சியைப் பற்றி பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே ராமதாஸ் பாஜகவிற்கு ஜீரோ மதிப்பெண் கொடுப்பேன் என்று கூறியிருந்தார். தற்போது அந்த கட்சியில் இணைந்து அவரது வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று கூறுகிறார். ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கட்சியை ஆதரிக்கின்ற கட்சி தான் பாட்டாளி மக்கள் கட்சி என்று தெரிவித்தார்.



அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்திருந்தபோது வெற்றி பெற்றோமா? என்று கேள்வி எழுப்பினர். அதிமுகவைப் பொறுத்தவரை கூட்டணியை பொறுத்து இல்லை; கூட்டணி வந்தால் வரவேற்போம். கூட்டணி கட்சிகள் வராவிட்டால் சொந்த பலத்தில் நிறைய திட்டங்களை நாட்டு மக்களுக்கு செய்துள்ளோம். 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக கட்சி துவங்கப்பட்டு பொன்விழா கண்ட கட்சி; அதிமுக ஆட்சியில் தான் தமிழகம் ஏற்றம் பெற்றது. எனவே கூட்டணி நம்பி கட்சி நடத்தவில்லை எனவும் கூறினார்.


கெஜ்ரிவால் கைது குறித்து நிலைமை அறிந்து தான் பதில் சொல்லமுடியும்; ஊழல் நடந்துள்ளதா? இல்லையா? என்பது குறித்து எவ்வாறு நமக்குத் தெரியும். டெல்லி வேறு ஒருமாநிலம், அந்த மாநிலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து முழுவிவரம் தெரியாமல் கருத்து கூற முடியாது. தவறு நடந்திருந்தால் தவறுதான்; தவறு நடக்காவிட்டால் கைது தவறுதான் எனவும் தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு லஞ்சஒழிப்பு துறை ஏவி விட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்கு தொடர்ந்தார்கள். அதிமுக ஆட்சியில் இருந்தபோது மத்தியில் இருக்கும் வருமானவரித்துறை அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்தினர். இது புதிதாக வரவில்லை; திமுக அரசால் பதியப்பட்ட வழக்கால் அமலக்கத்துறை சோதனை நடைபெற்றது இதற்குக் காரணம் திமுக தான் என்றும் பேசினார்.



தமிழகத்தில் அதிகம் அதிமுக புதுமுக வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, நானும் புதுமுகமாக தான் போட்டியிடபோது தேர்தலில் நின்றேன். புதுமுகமாக இருந்தால் தான் வெளியே வரமுடியும். எனக்கு முன்பாக பல பேர் இருந்தனர். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தனர். புதிய புதிய வேட்பாளர்களை அறிமுகம் செய்யும்போது தான் ஒவ்வொரு கட்சியும் வளரும். வேட்பாளர் தேர்வு என்பது அதிமுக ஆட்சிமன்ற குழு தான் தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.


நாடாளுமன்ற தேர்தலில் ஒரு ரூபாய் கூட செலவு செய்யமாட்டோம் என்று அண்ணாமலை தெரிவித்தது குறித்த கேள்விக்கு, ஒரு ரூபாய் செலவு செய்கிறாரா? இல்லையா? என்பதை பின்தொடர்ந்து சென்று பாருங்கள்; ஒரு ரூபாய் செலவு செய்யாமல் தேநீர், தண்ணீர் கூட குடிக்கமுடியாது. குறிப்பாக ஒரு ரூபாய் கூட செலவு செய்யமாட்டேன் என்று கூறுவது தவறானது. அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்தந்த கட்சி செலவு செய்பவர்கள், தேர்தல் ஆணையமும் இவ்வளவுதான் செய்ய செலவு செய்யவேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. பரபரப்பான செய்தி போடுவதற்காக இதுபோன்று அண்ணாமலை பேசியுள்ளதாக கூறினார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் கடுமையான ஊழல். ஊழல் இல்லாத இடமே கிடையாது. போதைப்பொருள்களை திமுக நிர்வாகிகளே வெளிநாட்டுகளுக்கு கடத்துவதாக செய்தி வெளியாகிறது. அவ்வாறு இருக்கும் நிலையில் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால் அதிமுக வெற்றி பெற்றால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும் என்றார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை நாளைய தினம் திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளதாக கூறினார். தற்போது சேலம் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் செல்வகணபதி அதிமுகவால் தான் சட்டமன்ற உறுப்பினராக அறிமுகம் செய்யப்பட்டார். அதிமுகவிற்கு மிகப்பெரிய துரோகம் செய்த செல்வகணபதிக்கு சேலம் மக்கள் தகுந்த தண்டனையை வழங்குவார்கள் என்றும் தெரிவித்தார்.