தேர்தல் முடிவு என்ன.? ஆட்சி அமைக்கப்போவது யார்?
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்துமுடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது நாளை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்து காத்துள்ளது. அந்த வகையில் கடந்த 50ஆண்டுகளுக்கும் மேலாக திமுக, அதிமுக என இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி அமைத்து வரும் நிலையில், தற்போது இந்த இரண்டு கட்சிகளுக்கும் டப் கொடுக்கும் வகையில் களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், தவெக என்ற கட்சி மூலம் தனது ரசிகர் பட்டாளத்தை கட்சி தொண்டர்களாக மாற்றியுள்ளார். இது மட்டுமில்லாமல் பள்ளி குழந்தைகளும் விஜய்க்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதனால் யாருடைய வாக்குகள் பிரிந்து தேர்தலில் என்ன முடிவு வரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்.?
இந்த நிலையில் நாளை 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணிக்கை எத்தனை மணிக்கு தொடங்கும்,முன்னிலை நிலவரம் எத்தனை மணிக்கு தெரியவரும் என்பதை தற்போது பார்க்கலாம். வாக்கு எண்ணிக்கைக்காக மொத்தம் 62 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- மே 4ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இதன்படி முதலில் தபால் வாக்குக்கள் எண்ணப்படும்.
- தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.
- ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர், மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்காணிப்பில் வாக்கு பணிகள் நடைபெறும்.
- சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் மேஜைகள் போடப்பட்டுள்ளது.
- குறைந்தபட்சமாக 14 மேஜைகள் மூலம் அதிகபட்சமாக 24 மேஜைகள் வரை போடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை மற்றும் மேஜைகளை பொறுத்து சுற்றுகளின் எண்ணிக்கை மாறுபடும்.
- ஒரு மேஜைக்கு ஒரு மேற்பார்வையாளர், ஒரு நுண் பார்வையாளர், ஒரு உதவியாளர், ஒரு கணினி பதிவாளர் என்று மொத்தம் 4 பணியாளர்கள் இருப்பார்கள்.
தபால் வாக்குகள் எண்ணும் முறை
- முதலில் ஒரு சட்டமன்ற தொகுதியில் வரப்பெற்ற மொத்த தபால் வாக்குகளின் எண்ணிக்கை தெரிவிக்கப்படும்.
- தபால் வாக்குகளை பொறுத்த வரையில் 500 வாக்குகளுக்கு ஒரு மேஜை போடப்பட்டுள்ளது.
- தபால் வாக்குகள் அனைத்தும் பிரிக்கப்பட்டு செல்லு படியாகும் வாக்குகள் மற்றும் செல்லுபடியாகத வாக்குகள் என்று தனியாக பிரிக்கப்படும்.
- தபால் வாக்கு சீட்டில் ஒரு வேட்பாளருக்கான பகுதியில் டிக் செய்து இருந்தால், சீல் வைத்து இருந்தால், வேட்பாளரின் பெயரை எழுதி இருந்தால் அந்த தபால் வாக்கு செல்லும்.
- தபால் வாக்கு நிராகரிப்பை பொறுத்தவரையில் தபால் வாக்கு படிவத்தில் உரிய அலுவலரின் கையெழுத்து மற்றும் முத்திரை இல்லாவிட்டால் அந்த தபால் வாக்கு செல்லுபடியாகது.
- இரண்டு வேட்பாளர்களின் பெயருக்கு அருகில் டிக் செய்து இருந்தாலும் அந்த வாக்கு செல்லுபடியாகது.
- செல்லும் தபால் வாக்குகள் ஒவ்வொன்றாக பிரிக்கப்பட்டு முகவர்களின் காண்பிக்கப்பட்டு, அந்த வேட்பாளர்களுக்கான சிறிய பெட்டியில் போடப்படும்.
- இறுதியான தபால் வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்டு இவிஎம் கடைசி சுற்றுக்கு முன்னதாக தபால் வாக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இவிஎம் -வாக்குகளை எண்ணும் முறை
- காலை 8 மணிக்கு பாதுகாப்பு அறையின் சீல் அனைத்து வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் அகற்றப்படும்.
- தேர்தல் பணியாளர்கள் மூலம் கட்டுபாட்டு கருவி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு எடுத்து வரப்பட்டு மேஜையில் வைக்கப்படும்.
- மேஜையில் கட்டுப்பாட்டு கருவியின் சீல் அகற்றப்படுட்டு முதலில் அந்த வாக்குச்சாவடியில் மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை காண்பிக்கப்படும்.
- முகவர்களின் தங்களிடம் உள்ள 17சி படிவத்தோடு இதை ஒப்பீட்டு சரிபார்த்து கொள்ளலாம்.
- ரிசல்ட் பொத்தானை அழுத்தினால் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்கு விவரங்கள் திரையில் தெரியவரும்.
- ஒவ்வொரு சுற்று முடிவிலும், வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் அந்த வைக்கப்பட்டு அறிவிப்பு பலகையில் எழுதப்படும்.
முன்னிலை நிலவரம் எப்போது தெரியும்.?
தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டியானது நடைபெறவுள்ளது. எனவே நாளைய தினம் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணியானது தொடங்கும், 8.30க்கு பிறகே இவிஎம் இயந்திர வாக்குகள் எண்ணப்படும். எனவே தபால் வாக்குகள் முன்னிலை நிலவரம் மட்டும் காலை 8.15 மணிக்கு தெரியவரும். இவிம் இயந்திர வாக்கு எண்ணிக்கை நிலவரம் 9 மணிக்கு தெரியவரும். ஆனால் 4 முனை போட்டி உள்ளதால் ஒவ்வொரு சுற்றும், ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதால் கடைசி வரை இழுபறி நீடிக்கும் என தகவல் கூறப்படுகிறது.
