தமிழர்களின் பெருமை, கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் அழிக்கத்துடிக்கிற பாசிச சக்திகளை திருச்செந்தூர் முருகப்பெருமான் வீழ்த்தி சூரசம்ஹாரம் செய்வார் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.




திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை சுவாமி தரிசனம் செய்தார். கோவில் மூலவர், சண்முகர், தட்சணாமூர்த்தி, சம்ஹாரமூர்த்தி, உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒருசாராரை வீழ்த்த நினைக்கும் அசுரர்களை போல இன்றும் அசுரர்கள் , அரக்கர்கள் உள்ளனர் என்றும் அவர்களை இந்த தேர்தலில் திருச்செந்தூர் முருகப்பெருமான் சூரசம்ஹாரம் செய்வார் என்றார். மேலும் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமா உள்ளதாக நம்பிக்கை தெரிவித்த அவர் இந்தியா முழுவதும் இ.ண்.டி.யா கூட்டணி 400 இடங்களில் வெற்றிபெறும் என்றும் கூட்டணி பலமாகவும் , எழுச்சியாகவும் உள்ளதாகும் கூட்டணியை மக்கள் புரிந்துகொண்டார்கள் என தெரிவித்தார்.




மேலும் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் மக்களின் பிரதமர் ராகுல்காந்தி எனத்தெரிவித்த அவர் மக்கள் ஏற்றுக்கொண்ட பிரதமர் ராகுல் காந்திதான் என்றும் தேசத்தின் ஒருமுகம், ஒரு குரல் ராகுல்காந்தி எனக்கூறினார். மேலும் தொடரந்து பேசிய அவர் மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தமிழர்களின் பெருமை , கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் அழிக்கத்துடிக்கிற பாசிச சக்திகளை முருகப்பெருமான் வீழ்த்ததி சூரசம்ஹாரம் செய்வார் என அவர் தெரிவித்தார்.