இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1952 ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில், போட்டியிடாமலே முதலமைச்சராக தேர்வானார் ராஜாஜி.


இளமை காலம்:


1878 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொரப்பள்ளி என்கிற கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை சக்கரவர்த்தி வெங்கடார்யா, தாயார் சிங்காரம்மா. பள்ளிக் கல்வி ஒசூரிலும், உயர்நிலைக் கல்வி பெங்களூரிலும், கல்லூரிக் கல்வி பெங்களூருவிலும் சென்னை மாகாணக் கல்லூரியிலும் பயின்றார். 1898ல் அலர்மேலு மங்கம்மாள் என்பவரை மணந்தார். மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண்பிள்ளைகள் பிறந்தனர். இவர் சிறிது காலம்  வழக்கறிஞர் தொழிலை நன்கு நடத்தி வந்தார்.


அரசியல் ஆரம்பம்:


பின்னர் அரசியலில் ஈடுபட்டு 1917 இல் சேலம் நகராட்சி உறுப்பினரானார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து ரவுலட் சட்டத்திற்கு எதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம்வைக்கம் சத்தியாகிரகம்  உள்ளிட்ட சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டார். தனது வழக்கறிஞர் தொழிலை கைவிட்டு, 1930 ஆம் ஆண்டு காந்தி தலைமையில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகம் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக சிறை சென்றார். இவர் காந்தியின் மிகச் சிறந்த பக்தர்.




1937ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார். 1937 ஆம் ஆண்டு 6,7,8 ஆம் வகுப்புகளில் இந்தி மொழி கட்டாயப்பாடமாக்கினார். பல்வேறு பகுதிகளில் இருந்து எதிர்ப்புகள் வந்தன. அண்ணா,பெரியார் உட்பட ஆயிரக்கணக்கானோர் சிறை புகுந்தார்கள். தாளமுத்து, நடராசன் எனும் இருவர் சிறையில் மரணம் அடைந்தார்கள். திணிப்புக்கு எதிராக சிறை சென்றவர்களை ,"அற்ப கூலிக்கு அமர்த்தப்பட்ட அடியாட்கள் !" என்று அழைத்தார். இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. தமிழ்மொழி கால் போன்றது ; இந்தி மொழி வண்டி மாதிரி ,ஆங்கிலம் ரயில் மாதிரி " என்று விளக்கம் தந்தார்.


இரண்டாம் உலக போர் சமயத்தில், காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்ட முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆங்கிலேயர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். 1946 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், வழங்கல், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராக பணியாற்றினார்.


போட்டியிடாமல் முதலமைச்சர்:



1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராகவும் 1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற முதல் இந்திய கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்தார். 1951 ல் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து காமன் வீல் கட்சி,தொழிலாளர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியுடன் காங்கிரஸ் கட்சி சார்பாக ராஜாஜி முதலமைச்சராக பதவியேற்றார். அந்த தேர்தலில் போட்டியிடாமலே முதலமைச்சரானார்.


இதையடுத்து, சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார். அப்போது அவர் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்திற்காக மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளானார். உள்கட்சிக்குள்ளே பெரும் எதிர்ப்பு வந்ததையடுத்து, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.  


Also Read: Annadurai: இந்தி எதிர்ப்பு முதல் இறுதிபயணம் வரை! தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்த அண்ணா!


தனிக்கட்சி உருவாக்கம்:



இதையடுத்து, சுதந்திராக் கட்சியை நிறுவினார். 1967 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து, தமிழக அரசியலில் முதன்முறையாக காங்கிரசல்லாத ஆட்சி உருவாக துணை நின்றார். அவருடன் கூட்டணி அமைத்த திமுக வெற்றி பெற்று சி. என். அண்ணாதுரை முதலமைச்சராக பொறுப்பேற்றார். நாடாளுமன்றத்திலும் சுதந்திராக் கட்சி 45 இடங்களைப் பிடித்து முதன்மை எதிர்கட்சியாக விளங்கியது. இது தமிழ்நாட்டு அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.


1954 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது. ராஜாஜி இலக்கியத்திலும் சிறந்து விளங்கினார். தமிழிலும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை மொழிபெயர்த்துள்ளார். வியாசர் விருந்து உள்ளிட்ட இலக்கியங்களை படைத்தார். "குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா"  என்ற பாடலை இயற்றியவரும் இவரே.


அவர் மதபீடங்களின் தலைவர்களை சந்தித்தது இல்லை என்றும் கோயில்களுக்கு செல்வதை பெரும்பாலும் தவிர்த்தார் என்றும்  கூறப்படுகிறது. ராஜாஜியின் மதச்சார்பின்மை தன்மையை கண்டு 'அரை முஸ்லீம் !' என்று வல்லபாய் பட்டேல் கருதினார். இவர் 1972 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதியில்,  ம்றைந்தார்.


சரியன்று பட்டதை செய்தார்:


கவர்னர் ஜெனரல், முதல்வர், கவர்னர், உள்துறை அமைச்சர் என்று எண்ணற்ற பதவிகளை வகித்த அவர் வாழ்ந்தது ஐம்பது ரூபாய் வாடகை வீட்டில் தான். கவர்னர் ஜெனரல் மாளிகையை விட்டு வெளியேறிய பொழுது வந்த பரிசுப்பொருட்களை எல்லாம் பீரோக்களில் அடுக்கி கொடுத்துவிட்டு கையில் தன்னுடைய கைத்தடியோடு மட்டும் வெளியேறினார் என கூறப்படுகிறது.


ராஜாஜியிடம் எல்லையில்லா நாகரீகம் இருந்தது. நேருவுடன் முரண்பட்டு தனிக்கட்சி தொடங்கிய பின்னரும் நேரு இறந்த பிறகு அவருக்கு இப்படி புகழ் மாலை சூட்டினார் அவர் ,"என்னைவிட 11 ஆண்டு இளையவர். 11 மடங்கு நாட்டுக்கு முக்கியமானவர். மக்களுக்கு என்னை விட 11,000 மடங்கு பிரியமானவர் நேரு. அவரின் பிரிவால் மிக சிறந்த நண்பரை இழந்துவிட்டேன் !" என்றார். பெரியாருடன் மிகவும் நெருக்கமாக நட்பு பாராட்டினார். ராஜாஜி தனக்கு எது சரியென்று படுகிறதோ அதன்படியே செயல்பட்டார்.


Also Read:Ambedkar: முதல் சட்டத்துறை அமைச்சர்தான்: ஆனாலும் பால் வியாபாரியிடம் தோற்ற அம்பேத்கர்: நடந்தது என்ன?