புதுச்சேரி  : புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, இளைஞர்கள் மற்றும் பெண்களைக் கவரும் வகையில் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை அவர் வெளியிட்டார்.

Continues below advertisement

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி பேசியதாவது: 

புதுச்சேரியை ஆட்சி செய்பவர்கள் மண்ணின் மைந்தர்கள் அல்ல, எங்கோ இருந்து புதுவையை ஆட்சி செய்கின்றனர். இங்கு நடக்கும் ஆட்சி மக்களின் விருப்பத்தை செயல்படுத்தும் அரசு அல்ல, டெல்லியில் தங்கள் கருத்துக்களை திணிப்பவர்களின் கீழ் செயல்படும் அரசாக உள்ளது. பாஜக கொள்கை, சித்தாத்தங்களை புதுவையில் புகுத்த நினைக்கின்றனர். புதுச்சேரி மக்களின் எண்ணங்களை ஏற்று நடத்தும் ஆட்சி நடக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முந்திக்கொண்டு துணைநிலை ஆளுநர் செயல்படுகிறார். புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. உயிரோட்டமாக இருந்த தொழில்கள் நசிந்துவிட்டது. நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன.

Continues below advertisement

அதானி அரசாகச் செயல்படும் பாஜக:

"பாஜக அரசு அதானி குழுமத்திற்காகச் செயல்படுகிறது. ஏற்கனவே காரைக்கால் துறைமுகம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் மின்துறையையும் அதானிக்கு விற்றுவிடுவார்கள். புதுச்சேரியில் தற்போது '30 சதவீத கமிஷன்' ஆட்சி நடக்கிறது. குடிநீர், வடிகால், பள்ளிக் கட்டடம் என எதைத் தொட்டாலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது."

"புதுச்சேரி தற்போது போலி மருந்து உற்பத்தியின் மையமாக மாறியுள்ளது. இது படுகொலைக்குச் சமமானது. போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதால் இரவில் பெண்கள், குழந்தைகள் நடமாட முடியவில்லை. வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகே மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கோவில் நிலங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன."

இறுதியாக, புதுச்சேரி மக்களுக்கும் தனது குடும்பத்திற்கும் இடையிலான உறவு அரசியல் கடந்தது எனக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, மக்களின் குரலை பிரதிபலிக்கும் உண்மையான அரசைத் தேர்வு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். 30 ஆயிரம் அரசு, தனியார் பணியிடங்களில் வேலை வழங்கப்படும். பெண்களுக்கு இலவச பஸ் பயணம் வழங்கப்படும். அரசு வேலைவாய்ப்பு வயது உச்சவரம்பு 40 ஆக உயர்த்தப்படும். ரூ.20 லட்சத்துக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் மருத்துவ காப்பீடு வசதி செய்து தரப்படும். புதுச்சேரி மக்களின் உணர்வுகளை, எண்ணங்களை பிரதிபலிக்கும் அரசாக இருக்கும். ஆளுநர் அரசர்போல புதுச்சேரியை ஆட்சி செய்வதை நாங்கள் விரும்பவில்லை.

புதுச்சேரி மக்கள் தான் இந்த அரசை ஆள வேண்டும். எனவேதான் மாநில அந்தஸ்து வேண்டும் என கூறுகிறோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 6 மாதத்தில் புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். அடுத்த தலைமுறை தலைவர்கள் உள்ளாட்சி தேர்தல் மூலம் அரசு நிர்வாகத்துக்கு வருவார்கள்.

புதுச்சேரி மக்களின் உண்மையான குரலை ஒலிக்கும் அரசை சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்வு செய்யுங்கள். ஒவ்வொரு முறை புதுவைக்கு வரும்போதும் உங்கள் அன்பை வெளிப்படுத்துவீர்கள். உங்களோடும், எனது குடும்பத்துக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உண்டு. இது அரசியல் உறவு அல்ல, அதையும் தாண்டி மனமார்ந்த, உள்ளார்த்தமான ஆழமான உணர்வு உள்ளது.

அந்த உறவின் அடிப்படை உண்மையான அன்பு, பரஸ்பர மரியாதை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் புதுவை மக்களின் குரல் மட்டுமே அரசில் ஒலிக்க வேண்டும், மக்களின் எண்ணங்கள் மட்டுமே அரசில் செயல்படுத்தப்பட வேண்டும். என் மீது நீங்கள் காட்டும் அன்புக்கு நன்றி. என்று அவர் தெரிவித்தார்.