புதுச்சேரி : புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று (மார்ச் 23) கடைசி நாள் என்பதால் அரசியல் களம் உச்சகட்டப் பரபரப்பில் உள்ளது. இந்நிலையில், ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகளை விட, காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்துள்ள உட்கட்சிப் பூசல் புதுச்சேரி அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

Continues below advertisement

நாராயணசாமிக்கு போட்டியிட வாய்ப்பு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் வி. நாராயணசாமிக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாக வெளியான தகவலால், ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கத்தின் இல்லத்தை முற்றுகையிட்டனர்.

பி-பார்ம் (B-Form) வழங்கியதில் அதிரடி

திமுக உடனான தொகுதிப் பங்கீடு ஒருவழியாக முடிவுக்கு வந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கான அதிகாரப்பூர்வ 'ஏ' மற்றும் 'பி' படிவங்களை மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் இன்று காலை தனது இல்லத்தில் வைத்து வழங்கி வந்தார். அப்போது, முன்னாள் முதல்வர் நாராயணசாமி போட்டியிட விரும்பிய நெல்லித்தோப்பு தொகுதிக்கு அவருக்குப் படிவம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.

Continues below advertisement

தலைவர் வீட்டின் முன் தர்ணா

இச்செய்தி காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, நாராயணசாமியின் இல்லத்திலிருந்து திரண்டு வந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள், அடுத்த தெருவில் உள்ள வைத்திலிங்கத்தின் வீட்டைச் சூழ்ந்தனர். “கட்சிக்காக இரவு பகலாக உழைத்த மூத்த தலைவரை ஓரங்கட்டுவதா?” எனக் கேள்வி எழுப்பிய அவர்கள், வைத்திலிங்கம் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி ஆவேசமாக முழக்கமிட்டனர். போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சதி நடப்பதாகக் குற்றச்சாட்டு

நாராயணசாமிக்கு சீட் கிடைக்காமல் போக உட்கட்சி சதியே காரணம் என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திமுகவின் பிடிவாதம்: நெல்லித்தோப்பு தொகுதியை திமுக விடாப்பிடியாகக் கேட்பதாலும், அங்கு ஓம் சக்தி சேகர் அல்லது கார்த்திகேயனை நிறுத்தத் திட்டமிடுவதாலும் நாராயணசாமி பலிகடா ஆக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

தொண்டர்கள் எச்சரிக்கை: "தொகுதிக்குத் தொடர்பில்லாத நபர்களை நிறுத்தினால் காங்கிரஸ் 500 வாக்குகளைக் கூடப் பெற முடியாது. செல்வாக்குள்ள நாராயணசாமிக்கே வாய்ப்பளிக்க வேண்டும்" எனத் தொண்டர்கள் கடித்தம் அளித்துள்ளனர்.

நெருக்கடியில் காங்கிரஸ் தலைமை

ஏற்கனவே மங்கலம் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்கியதற்கு எதிராக ரகுபதியின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தற்போது நாராயணசாமி விவகாரம் காங்கிரஸை நிலைகுலையச் செய்துள்ளது. த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) தனது 30 வேட்பாளர்களையும் அறிவித்து களத்தில் இறங்கியுள்ள சூழலில், காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த மோதல் அக்கட்சியின் தேர்தல் வெற்றியைப் பாதிக்குமா என்ற கேள்வி அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.

தற்போது நிலவும் பதற்றத்தைத் தணிக்க, மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் அதிருப்தி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.