உணவுப்பொருட்களைச் சமைக்கும்போது சில விஷயங்களை நாம் பின்பற்றினால் அதன் சுவையும், தரமும் மேலும் அதிகரிக்கும். அவை என்னென்ன என்பதை கீழே காணலாம்.
1. கீரைகள் மற்றும் கிழங்குகள் ஆகியவற்றை சமைக்கும்போது அதை மூடிவைத்து சமைக்கக்கூடாது.
2. கீரைகளை வேகவைக்கும்போது இரண்டு பல் பூண்டும், ஒரு தக்காளியும் சேர்த்து வைப்பது சிறப்பாகும்.
3. பலருக்கும் பூரி சுடும்போது அது மொறு, மொறுவென்று வரவில்லை என்ற வேதனை இருக்கும். அதற்கு பூரிக்கு மாவு பிசையும்போது அதனுடன் சற்று ரவை சேர்த்து பிசைந்தால் பூரி மொறு, மொறுவென்று வரும்.
4. மாம்பழக் குழம்பை கெட்டியாக வைப்பது எப்படி? என்று பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். அதற்கு தேங்காய், மிளகு, மஞ்சள், சீரகம் ஆகியவற்றை நாம் அரைக்கும்போதே அதனுடன் பச்சரிசியும் சற்று சேர்த்து அரைத்தால் மாம்பழக்குழம்பு கெட்டியாக வரும்.
5. பொதுவாக காய்கறிகள், பழங்களை வாங்கி வந்தால் அவற்றை காற்றோட்டமாக வைப்பதே சிறந்ததாகவும். வெங்காயம் வாங்கி வந்தவுடன் அவற்றை வெளியில் தரையில் கொட்டி வைப்பது சிறப்பாகும். பிளாஸ்டிக் கவர், ப்ரிட்ஜ் ஆகியவற்றில் வைப்பதை தவிர்ப்பது சிறப்பாகும்.
6. மாங்காய் ஊறுகாய் நன்றாக வாசனை வருவதற்கு மாங்காயை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கியதுடன் அதனுடன் உப்பு, மிளகு, பொடி சேர்த்த பிறகு சிறியளவு தேங்காய்ப்பால், நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் மாங்காய் ஊறுகாய் ஊறிவிடுவது மட்டுமின்றி, சாப்பிட சுவையாகவும் இருக்கும்.
7. சமைப்பதற்காக தேங்காய் பலரும் உடைக்கும்போது இரண்டாக உடையாமல் சிதறலாக உடைவதால் சிரமம் அடைவார்கள். அதற்கு தேங்காயை உடைப்பதற்கு ஒரு 5 நிமிடத்திற்கு முன்பு நன்றாக குளிர்ந்த நீரில் மூழ்க வைக்க வேண்டும். அதன்பின்பு, எடுத்து உடைத்தால் தேங்காய் நன்றாக சரிபாதியாக உடையும்.
8. ரசத்தில் பல வகை உண்டு. எந்த வகை ரசமாக இருந்தாலும் அதை ஒரு ஸ்பூன் நெய்யில் தாளித்தால் அதன் சுவை வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும்.
9.பெரும்பாலும் வீடுகள் பருப்பு வேகுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது பெரும் தலைவலியான ஒன்றாக இருக்கும். அதற்கு துவரம் பருப்பை வேக வைக்கும்போது, அதனுடன் பூண்டையோ அல்லது கடலை எண்ணெய் சிறிய அளவோ சேர்த்தால் மிக சீக்கிரம் வெந்து விடும்.
10. இட்லி மாவு புளித்துவிட்டால் என்ன செய்வது? என்ற குழப்பம் சிலருக்கு இருக்கும். அவ்வாறு புளித்துவிட்டால் அதில் கடுகு, உளுந்து, சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்து குழிப்பணியாரமாக செய்து சாப்பிடலாம்.
இனி வீட்டில் சமைக்கும்போது இதை அனைவரும் வீடுகளில் பின்பற்றினால் சமையல் எளிதானதாக மாறும்.
