தேமுதிகவையும், திமுகவையும் பற்றி கண்ணியமில்லாமல் பேசினால் மக்களே அடித்து விரட்டுவார்கள் என எதிர்க்கட்சிகளுக்கு பிரேமலதா விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தேமுதிக முதல்முறையாக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 10 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருதாச்சலம் தொகுதியிலும், இளைஞரணி தலைவர் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியிலும் வேட்பாளராக களம் காண்கிறார். இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் சென்னை தொகுதி முழுக்க திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் போளூர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரேமலதா பரப்புரை மேற்கொண்ட நிலையில் எடப்பாடி பழனிசாமியையும், அன்புமணியையும் சரமாரியாக எச்சரித்தார். அதாவது, “நாம் இன்றைக்கு எவ்வளவு கண்ணியமாக பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீ இன்றைக்கு கொஞ்சம் கூட கண்ணியம் இல்லாமல் வந்தீங்கனா உங்க வேட்பாளர் ஜெயித்தால் என்ன செய்வாங்க என்பதைப் பற்றி பேசு. அதை விட்டுவிட்டு குடும்பத்தை இழுக்குறது, கண்ணியக்குறைவாக பேசினால் போளூர் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மக்களே உன்னை அடித்து விரட்டுவார்கள். அதில் மாற்றுக் கருத்தே கிடையாது. உங்களைப் பற்றியெல்லாம் நாங்கள் பேசுவது இல்லை. அப்படி இருக்கும்போது எங்களைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்?
உன்னால் முடிந்தால் உன் வேட்பாளர் மக்களுக்கு என்ன செய்வார்கள் என சொல்லுங்கள். தேமுதிகவையும், திமுகவையும், கலைஞர் கருணாநிதி குடும்பத்தையும், வேட்பாளரையும் பற்றி பேசினால் மக்களே அடித்து விரட்டுவார்கள். அண்ணா சொன்னதுபோல கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன் கேப்டன் விஜயகாந்த் தேமுதிகவை வழிநடத்தியுள்ளார். யாராக இருந்தாலும் தேவையில்லாத வார்த்தையை பேசக்கூடாது. தேர்தல் வருவது குடும்பத்தை திட்டுவதற்காகவா வருகிறது.
உங்களுக்கு திரும்பிக்கூட பார்க்க முடியாத அளவுக்கு ஊழல் வழக்கு இருக்கு. அதனால் எங்களைப் பற்றி பேச உனக்கு தகுதியும், தார்மீக உரிமையும் இல்லை. இதனை பாமகவைச் சேர்ந்த அன்புமணிக்கு என்னுடைய இறுதி எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன். இந்த வேலையெல்லாம் எங்களிடம் வைக்க வேண்டாம். நாங்கள் பேச ஆரம்பித்தால் தலைதெறிக்க நீங்கள் ஓட வேண்டிய நிலைமை வரும். அதேமாதிரி தான் எடப்பாடி பழனிசாமியும் ஓவரா பேசிகிட்டு இருக்காங்க.
திட்டுவதால் என்ன பலன் இருக்கு சொல்லுங்க. அவர்களுக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்பதால் எதிர்க்கட்சிகளை திட்டுகிறார்கள். தேர்தல் வருவது மக்களுக்கும் தொகுதிக்கும் நன்மை செய்வதற்காக தான். அதனை மக்களாகிய நீங்கள் வாக்குகள் மூலம் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்” என பிரேமலதா தெரிவித்தார்.
