2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் பின்வாங்கியுள்ளார். அவருக்கு பதிலாக ஜோதிமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஒரே வாரத்தில் மாறிய காட்சி
2026ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, டாக்டர் ராமதாஸ் - சசிகலா கூட்டணி என 5 முனை போட்டி ஏற்பட்டு தமிழக அரசியல் களம் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. இதில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 இடங்கள் ஒதுக்கப்பட்டது. கடந்த தேர்தலில் 6 இடங்களைப் பெற்ற அக்கட்சி இம்முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்டதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது.
ஆனால் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு கடந்த 2021 தேர்தலில் வழங்கப்பட்டதை விட தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்ட நிலையில் விசிகவுக்கு மட்டும் அதிகரிக்கப்பட்டது அக்கட்சி தொண்டர்களிடையே சற்று நிம்மதியை கொடுத்தது. இந்த 8 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் திருமாவளவன் 10 ஆண்டுகளுக்குப் பின் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் வேட்பாளராக களமிறங்குவதாக தெரிவித்தார்.
மாறிய விசிக வேட்பாளர்
இந்த நிலையில் திடீரென திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடவில்லை என தெரிவித்துள்ளார். இது விசிக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜோதிமணி இளையபெருமாள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
யார் இந்த ஜோதிமணி?
ஜோதிமணிக்கு முன் அவரது தந்தை இளையப்பெருமாள் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றவர். இவர் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டிக்கு முதல் தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இளையபெருமாள் பணியாற்றியிருக்கிறார். ஒரு முறை எம்.எல்.ஏ.,வாகவும், 20 ஆண்டுகள் எம்.பி.,யாகவும் இளையபெருமாள் இருந்திருக்கிறார்.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இளையப்பெருமாள் வழியில் ஜோதிமணியும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக உள்ளார். விசிக சார்பில் வேட்பாளராக தான் அறிவிக்கப்பட்டதே ஊடகங்கள் வாயிலாக தான் தெரியும் என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
நான் காங்கிரஸ் கட்சி சார்பில் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் போட்டியிட விருப்பமனு வழங்கியிருந்தேன். ஆனால் கூட்டணிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. திடீரென என்னை திருமாவளவன் வேட்பாளராக அறிவித்தது மகிழ்ச்சியாக உள்ளது. நான் ஆரம்ப காலத்தில் காங்கிரஸில் பயணப்பட்டு இடையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சென்று மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் வந்தேன். காங்கிரஸ், விசிக கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளது. அதனால் காங்கிரஸ் கட்சி உறுப்பினரான எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம். நான் என்ன சின்னத்தில் நிற்கப்போகிறேன் என்பதை தலைவர்கள் பேசி முடிவு செய்வார்கள் எனவும் ஜோதிமணி கூறியுள்ளார்.
