சென்னை : தமிழக அரசியலில் 'விழுப்புரம் சிங்கம்' என்று அழைக்கப்படும் திமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்முடி, இந்த முறை தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்க முடிவு செய்துள்ளார். வாரிசு அரசியலா அல்லது கட்டாய ஓய்வா என்ற விவாதங்கள் ஒருபுறம் இருக்க, தனது கோட்டையான திருக்கோவிலூர் தொகுதியைத் தனது மகனுக்கு விட்டுக்கொடுத்துள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் கடந்த நான்கு தசாப்தங்களாக அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. தன் வாரிசுக்காகத் தனது நீண்டகால அரசியல் பயணத்திற்கு அவர் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ முற்றுப்புள்ளி வைக்கத் துணிந்திருப்பது கட்சித் தொண்டர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
திமுக நேர்காணலில் கசிந்த ரகசியம்
விழுப்புரம் மாவட்டத்திற்கான திமுக வேட்பாளர் நேர்காணல் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கமாக எந்நேரமும் உற்சாகமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபடும் பொன்முடி, இம்முறை போட்டியிட விருப்ப மனு கூட அளிக்கவில்லை என்பது நேர்காணலின் போது உறுதி செய்யப்பட்டது. அவருக்குப் பதிலாக அவரது மகன் கவுதம சிகாமணி, திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். இதனை அவரே நேர்காணலுக்கு வந்தபோது செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.
பதவி இழப்பும்.. ஒதுங்கியிருந்த பொன்முடியும்..
எட்டு முறை எம்.எல்.ஏ-வாகவும், பலமுறை செல்வாக்கு மிக்க அமைச்சராகவும் இருந்த பொன்முடிக்கு கடந்த ஆண்டு சோதனை ஆண்டாக அமைந்தது. சர்ச்சைக்குரிய பேச்சுகள் மற்றும் நீதிமன்ற விவகாரங்களால் தனது பதவியை இழந்த அவர், அதன் பிறகு கட்சியில் பொறுப்புகள் வழங்கப்பட்டாலும் பழைய உற்சாகத்துடன் செயல்படவில்லை. அமைச்சர் பதவி இல்லாத சூழலில், அதிகார மையத்திலிருந்து அவர் ஓரங்கட்டப்பட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மகனுக்காக மல்லுக்கட்டு: 'தேர்தல் வியூகக் குழு' கொடுத்த செக்!
தனது வாரிசு கவுதம சிகாமணியை எப்படியாவது சட்டமன்றத்திற்குள் நுழைக்க வேண்டும் என்பதில் பொன்முடி உறுதியாக இருந்தார். இதற்காக அவர் தனது கோட்டையான விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி தொகுதியைக் கேட்டதாகத் தெரிகிறது. ஆனால், அங்குள்ள சிட்டிங் எம்.எல்.ஏ-க்களை மாற்றினால் உள்ளூர் அரசியலில் பெரும் குழப்பம் வெடிக்கும் என திமுகவின் தேர்தல் வியூகக் குழு தலைமைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
"சிட்டிங் எம்.எல்.ஏ-க்களின் தொகுதியை மாற்ற முடியாது" என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்ததால், வேறு வழியின்றி தனது சொந்தத் தொகுதியான திருக்கோவிலூரையே மகனுக்காக விட்டுக்கொடுக்கப் பொன்முடி சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.
துரைமுருகனும் இதே பாதையிலா?
பொன்முடியின் இந்த முடிவு திமுகவின் அடுத்தடுத்த மூத்த தலைவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகனும் தனது வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் தனது வாரிசுக்கு வழிவிட வாய்ப்புள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடி இல்லாத ஒரு தேர்தல் களம் என்பது கடந்த 30 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. பொன்முடியின் இந்த 'தியாகம்' கவுதம சிகாமணிக்கு வெற்றியைத் தேடித்தருமா அல்லது திமுகவின் கோட்டையில் சரிவை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
