பாமகவின் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் அன்புமணி இன்று வெளியிட்டுள்ளார். அதில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய அம்சங்கள் இதோ!

Continues below advertisement
  • ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும்.
  • அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் புத்தகப்பை இல்லாத கல்விமுறை அறிமுகம் செய்யப்படும்.
  •  புத்தகப்பை இல்லாக் கல்வி முறையை செயல்படுத்துவதற்கு வசதியாக, 6ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவசக் கைக் கணினி வழங்கப்படும்.
  • அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும்.
  • மாணவர்களின் இடைநிற்றலைத் தடுப்பதற்காக ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ- மாணவியருக்கு 10ஆம் வகுப்பில் மாதம் ரூ.500 வீதமும், 11, 12ஆம் வகுப்புகளில் மாதம் ரூ.1,000 வீதமும் நிதியுதவி வழங்கப்படும்.

பட்டப்படிப்புக்கு கல்விக் கட்டணம் இல்லை

  • அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் அனைவருக்கும் பட்டப்படிப்பு கட்டணமின்றி வழங்கப்படும்.
  • அனைத்துத் தொகுதிகளிலும் ஓர் அரசு கலைக் கல்லூரி செயல்படுவது உறுதி செய்யப்படும்.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் இரு மகளிர் அரசு கலைக் கல்லூரிகள் செயல்படுவது உறுதி செய்யப்படும்.
  • மாவட்டத்திற்கு ஒரு பொறியியல் கல்லூரி இருக்கும் வகையில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படும்.
  • தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் 1000 பேரும், மாணவிகளில் 1000 பேரும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு உயர்கல்வி பயில அனுப்பப்படுவர். இதற்கான அனைத்துச் செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும்.
  • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆண்டுக்கு 2 ஆயிரம் பேர் வீதம் ஐந்தாண்டுகளில் 10 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
  • உதவிப் பேராசிரியர் நியமனங்களில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு பணியிடங்கள், பல்கலைக் கழக மானியக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட தகுதி பெற்ற கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஒதுக்கப்படும்.
  • உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் வரை அவற்றில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் ரூ.50,000 ஆக உயர்த்தப்படும்.

நீட் தேர்வு விலக்கு

Continues below advertisement

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் எனப்படும் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் விலக்கு பெறப்படும்.

உயர்கல்வி முடித்து 2 ஆண்டுகளுக்குள் பணியில் சேராத மாணவர்கள் பெற்ற கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இந்தக் கடன் தொகையை அரசே செலுத்தும்.

வேலைவாய்ப்பு

5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

2026-27, 2027-28 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் 2.5 இலட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட நான்காம் தொகுதிப் பணிகளுக்கு 35,000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.

குரூப் 2 பணிகளுக்கு 10,000 பேர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அரசுப் பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் வீதம் நியமிக்கவும், காலியிடங்களை நிரப்பவும் ஒரு இலட்சத்திற்கும் கூடுதலான ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும். முதல்கட்டமாக 2025-26ஆம் ஆண்டில் 40,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

காவல்துறை, தீயவிப்புத்துறை, வனத்துறை உள்ளிட்ட சீருடைப் பணிகளுக்கு 20,000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.

போக்குவரத்துத் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு 10,000 பேர் நியமனம் செய்யப்படுவார்கள்.

மின்சார வாரியத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்நுட்பப் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், முதல்கட்டமாக 16,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4,000 மருத்துவர்கள், 3,000 மருத்துவத்துறைப் பணியாளர்கள் என மொத்தம் 7,000 பேர் நியமிக்கப்படுவர்.

தமிழக அரசால் தொடங்கப்படவுள்ள 30,000 காவிரி பல்பொருள் அங்காடிகளில் பணி செய்வதற்காக ஒரு இலட்சம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இவ்வாறு பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.