தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில், நெல்லை மாவட்டத்தில் 9 யூனியன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இதில் 204 பஞ்சாயத்து தலைவர்கள், 1,731 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 122 யூனியன் வார்டு உறுப்பினர்கள், 12 மாவட்ட பஞ்சாயத்து குழு உறுப்பினர்கள் நேரடியாக வாக்காளர்களால் ஓட்டு போட்டு தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர்.




வாக்குப்பதிவு வருகிற 6ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி என 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை மந்தகதியில் இருந்த வேட்புமனு தாக்கல் நேற்று விறுவிறுப்பு அடைந்தது. யூனியன் அலுவலகங்கள், பஞ்சாயத்து அலுவலங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,885 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நேற்று முன்தினம் வரை 218 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று மேலும் 483 பேர் மனு தாக்கல் செய்தனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 701 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏற்கனவே 870 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 1,234 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.



 

இவர்களுடன் சேர்த்து 2,104 பேர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்து உள்ளனர். யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு இதுவரை 23 பேரும், நேற்று 162 பேர் என மொத்தம் 185 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். மாவட்ட பஞ்சாயத்து குழு உறுப்பினர் பதவிக்கு இதுவரை யாருமே மனு தாக்கல் செய்யாத நிலையில் நேற்று 6 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். நெல்லை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2,996 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2,285 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 556 பேரும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,503 பேரும், யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு 211 பேரும், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 15 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று ஒரேநாளில் 4,170 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

 


கொரோனா குறித்த அச்சம் கொஞ்சம் கூட இல்லாமல் மூச்சு விட கூட இடமில்லாமல் சமூக இடைவெளியின்றி நெல்லை மாவட்டம் பாளையம்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூடிய கூட்டம் . கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர் . பாளையம்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ள சாலையில் சித்தா கல்லூரி உள்ளது மேலும் கல்லூரிகள் பள்ளிகள் திறந்ததால் காலை மாலை வேளையில் மிகுந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் செய்ய வருவோரிடம் ஒரு கிராமமே அவர்களுடன் வருகிறார்கள். மேலும் குறுகிய சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்வதால் அந்தப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது . இதுமட்டுமின்றி தேவையற்ற கூட்டங்களை கட்டுப்படுத்த பாளையம்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் போதிய போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது