தமிழக சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக, திருநெல்வேலி எம்.எல்.ஏவும் பாஜக மாநிலத் தலைவருமான நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.  

Continues below advertisement

தேர்தல் களம் வெயில் நிலத்தைவிட அதிகமாக தகித்துவரும் சூழலில், சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பாஜக, அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள சூழலில், 27 தொகுதிகளில் இந்த முறை போட்டியிடுகிறது. 

பாஜகவுக்கு ஒதுக்கப்படாத தொகுதிகள்

இந்த நிலையில் கடந்த முறை திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், வெற்றி வாகை சூடி கோட்டைக்குச் சென்றார். அதேபோல அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தார். ஆனால் இம்முறை, இந்த இரு தொகுதிகளுமே பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை. 

Continues below advertisement

இதற்கிடையே தான் இந்த முறை தொகுதி மாறிப் போட்டியிடுவதாகவும் சாத்தூரில் களம் காண்பதாகவும் தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், அண்ணாமலை போட்டியிடுவாரா என்றும் பதில் அளித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’சில மாவட்டங்களில் அதிமுக, அதிக தொகுதிகளைப் பெற்றுள்ளது. சில இடங்களில் பாஜக அதிகம் பெற்றுள்ளோம். அதிமுக – பாஜக இடையே பரஸ்பரம் பேசி தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்ணாமலை போட்டியிடுகிறாரா?

சாத்தூர் தொகுதியில் இந்த முறை போட்டியிட உள்ளேன். அண்ணாமலை போட்டியிடுவது குறித்து பாஜக மேலிடம் முடிவெடுக்கும்’’ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜக மேலிடம் வேட்பாளர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே, நயினார் தனது தொகுதியை அறிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதேபோல தமிழிசை செளர்ந்தராஜனுடன் சேர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.