கோவை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பாடியிடம் வெற்றி சான்றிதழ்களை பெற்றுக் கொண்டார். அப்போது அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உடன் இருந்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஜி.சி.டி.கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது, “கோவை தொகுதியில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம். தமிழகத்திலும் புதுச்சேரியிலும் நாப்பதும் நமதே என வெற்றி பெற்றுள்ளோம். கோவை மண்ணில் 28 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பாராளுமன்ற உறுப்பினரை தந்துள்ளனர். திமுக கோவையை கைப்பற்றியுள்ளது. பாசிசத்துக்கு எதிராக மகத்தான வெற்றியை கண்டுள்ளோம் தொடர்ந்து கோவை மக்களுக்கு அற்புதமான திட்டத்தை தருவோம்.


ஒட்டுமொத்த தாய் குலமும் திமுகவிற்கு வெற்றியை தந்துள்ளனர். நிச்சயமாக அனைத்து வாக்குறுதியும் நிறைவேற்றி தரப்படும். இந்த வெற்றிக்கு கோவை மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பெண்களுக்கு கொடுத்துள்ள மகத்தான திட்டத்திற்கு தான் தலைவருக்கு கிடைத்த தொடர் வெற்றி. திமுக தலைவர் நாகரிக அரசியலுக்கு பெயர் போனவர். இந்த மண்ணில் வெறுப்பு அரசியல் இருக்கக் கூடாது இனியாவது அவர்கள் வெறுப்பு அரசியல் இல்லாமல் வளர்ச்சி அரசியலை நோக்கி வருவார்கள் என நம்புகிறோம். விமான நிலைய விரிவாக்க பணியில் ஒட்டுமொத்த நில எடுப்பு பணியை திமுக தான் முடித்துள்ளது.விரைவில் விமான நிலைய விரிவாக்கம் செய்து முடிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.




திமுக வெற்றி


கோவை மக்களவை தொகுதி 1952 ம் ஆண்டு முதல் இதுவரை 17 தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும், திமுக மற்றும் பாஜக தலா 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 10,41,349 பேர், பெண் வாக்காளர்கள் 10,64,394 பேர், மூன்றாம் பாலினத்தவர் 381 பேர் என மொத்தம் 21,06,124 வாக்காளர்கள் உள்ளனர். 26 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 37 வேட்பாளர்கள் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டனர். அதில் திமுகவை சேர்ந்த கணபதி ராஜ்குமார், அதிமுகவை சேர்ந்த சிங்கை ராமச்சந்திரன், பாஜகவை சேர்ந்த அண்ணாமலை ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.


வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். பாஜக மாநிலத் தலைவர் தொடர்ந்து பின்னடைவு சந்தித்து வந்தார். சில சுற்றுகளில் திமுகவை விட கூடுதலாக வாக்குகளை பெற்றாலும், அவரால் இறுதிவரை முன்னிலை பெற முடியவில்லை. இறுதியாக 24 சுற்றுகள் மற்றும் தபால் வாக்குகள் சேர்த்து கோவை மக்களவை தொகுதியில் 1 இலட்சத்து 18 ஆயிரத்து 68 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார். திமுக 568200 வாக்குகளும், பாஜக 450132 வாக்குகளும், அதிமுக 236490 வாக்குகளும்,
நாதக 82657 வாக்குகளும் பெற்றனர். இதனால் 28 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கோவை தொகுதியில் நேரடியாக போட்டியிட்டு வென்றுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வென்ற, அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.