சொந்த பிரச்னைக்கு கூட குரல் கொடுக்காதவர் விஜய் என தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் விமர்சித்துள்ளார். 

Continues below advertisement

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பூபாலராயபுரம் பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சார கூட்டத்தில்  அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “நான் 1996ல் அரசியலுக்கு வந்தேன். வரும் ஆகஸ்ட் மாதம் வந்தால் 30 ஆண்டுகள் முடிவடைகிறது. திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆனால் கட்சி தொடங்கி ஒரு வருடத்திலேயே நான் தான் முதலமைச்சர் என சிலர் வருகிறார்கள். ஆனால் பாஜகவின் பெயரை சொல்லவே பயந்து சாகிறார்கள்.

தன்னைப் பார்க்க வந்து இறந்த 41 பேரின் வீட்டுக்கு சென்று கூட விஜய் ஆறுதல் சொல்லவில்லை. இது புது கலாச்சாரம் போல இருக்கிறது. விஜய் பெண் பாதுகாப்பு பற்றி பேசுகிறார். இவரின் மனைவி, பிள்ளைகளுக்கு கூட பாதுகாப்பு வழங்கவில்லை. தன்னுடைய பிரச்னைக்கு கூட விஜய் குரல் கொடுக்கவில்லை. தான் நடித்த ஜனநாயகன் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுக்கே குரல் கொடுக்காத விஜய் என்ன ஜனநாயக ஆட்சி நடத்தப் போகிறார் என்பது தெரியவில்லை என அமைச்சர் கீதாஜீவன் விமர்சித்தார். 

Continues below advertisement

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு பாஜக எவ்வளவோ நெருக்கடி கொடுக்கிறது. அதைப்பற்றி ஒரு வார்த்தை விஜய் கேட்கவில்லை. அவ்வளவு பயம் அவருக்கு இருக்கிறது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தொடங்கி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வரை பல கட்சிகள் நூற்றாண்டை கடந்த கட்சிகள். காலம் காலமாக மக்கள் நலன் பெறனும், உரிமைகள் பெறவும், நலத்திட்டங்களை அனுபவிக்க வேண்டும் என திட்டம்போட்டு செயல்படும் கட்சிகள். 

ஆனால் இன்றைக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் நம்மையெல்லாம் இழித்து பேசுகிறது. நான் தான் முதலமைச்சர் என தனக்கு தானே விஜய் பேசிக்கொண்டிருக்கிறார். மதச்சார்பற்ற கூட்டணி அப்படி கிடையாது. திமுக ஒரு விஷயம் செய்யவில்லை என்றால் கூட்டணி கட்சியினரே வந்து கேட்பார்கள். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் மக்கள் நலன் விரும்பிகளாக உள்ளனர். கொரோனா,பெருவெள்ளம் என எதுவாக இருந்தாலும் சரி மக்களுக்காக களத்தில் இருக்கிறோம். எனவே யார் வந்தாலும் சரியான பதிலடி கொடுக்க  மக்களாகிய நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என கீதா ஜீவன் பேசினார்.