மயிலாடுதுறை: சட்டமன்றத் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5.50 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்தப் பணம் சீர்காழி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.

Continues below advertisement

குத்தாலத்தில் தீவிர வாகன சோதனை

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தின் முக்கிய எல்லைகள் மற்றும் சாலைகளில் தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, இன்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள சேத்திரபாலபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில், வேளாண்மை அலுவலர் லாரன்ஸ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.

Continues below advertisement

சிக்கிய சொகுசு கார்

அப்போது, கோமல் பகுதியிலிருந்து சீர்காழி நோக்கி அதிவேகமாக வந்த ஒரு சொகுசு காரை அதிகாரிகள் மறித்தனர். அந்த காரில் சோதனை செய்தபோது, கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த காரில் மொத்தம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இப்பணத்தை எடுத்துச் சென்றவர்களிடம் அதிகாரிகள் ஆவணங்களைக் கேட்டபோது, அந்தப் பணத்திற்குரிய முறையான வங்கி ஆவணங்களோ அல்லது வருமான வரிச் சான்றிதழ்களோ அவர்களிடம் இல்லை என்பது தெரியவந்தது.

வேட்பாளர் சிக்கியது எப்படி?

காரில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில், அந்த கார் சசிகலா புதிதாகத் தொடங்கியுள்ள "அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் (APMMPK) சீர்காழி தொகுதி வேட்பாளரான மாலதி என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது.

கோமல் கிராமத்தைச் சேர்ந்த வேட்பாளர் மாலதி, கட்சி நிர்வாகிகளான பாலாஜி, புருஷோத்தமன் மற்றும் டிரைவர் சாமுவேல் ஆகியோருடன் காரில் சீர்காழி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றபோது, கட்சிச் செலவுகளுக்காக இந்தப் பணத்தைக் கொண்டு சென்றதாக முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், தேர்தல் விதிகளின்படி ரூ.50,000-க்கு மேல் ரொக்கமாகக் கொண்டு செல்ல ஆவணங்கள் கட்டாயம் என்பதால், அதிகாரிகள் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5.50 லட்சம் ரொக்கப் பணத்தை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மயிலாடுதுறை தலைமையிடத்து தனி துணை வட்டாட்சியர் அனிதாவிடம் ஒப்படைத்தனர். அந்தப் பணம் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்தால் மட்டுமே அந்தப் பணம் திரும்ப வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற வேட்பாளர்

பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வேட்பாளர் மாலதி அங்கிருந்து சீர்காழிக்குச் சென்று தனது வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தாக்கல் செய்ய உள்ள நிலையில், வேட்பாளர் ஒருவரிடம் தேர்தல் பறக்கும் படையினர் லட்சக்கணக்கில் பணத்தைப் பறிமுதல் செய்த சம்பவம் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.