மயிலாடுதுறை: "டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவர்தான் இந்த ஊர் மாப்பிள்ளை ஸ்டாலின்" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பொதுக்கூட்டத்தில், பூம்புகார் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். பவுன்ராஜ், சீர்காழி வேட்பாளர் ம.சக்தி மற்றும் மயிலாடுதுறை பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிசாமி ஆகியோரை ஆதரித்து அவர் உரையாற்றினார்.

"மாப்பிள்ளையாக வந்து மக்களுக்கு என்ன செய்தீர்கள்?"

முதலமைச்சர் ஸ்டாலினின் முந்தைய பேச்சைச் சுட்டிக்காட்டிப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "சீர்காழி பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தான் இந்த ஊர் மாப்பிள்ளை என்று கூறி வாக்கு கேட்டார். மாப்பிள்ளையாக வந்து தங்கிய நீங்கள், இந்த டெல்டா மக்களுக்குச் செய்த நன்மை என்ன? டெல்டா மாவட்டங்களைச் சீரழிக்கும் மீத்தேன், ஈத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்குக் கையெழுத்திட்டது திமுக ஆட்சிதான். ஆனால், டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, விவசாயிகளைக் காத்தவர் இந்த எடப்பாடி பழனிசாமி," என்று முழங்கினார்.

Continues below advertisement

அதிமுகவின் சாதனைப் பட்டியல்

மயிலாடுதுறை மாவட்ட உருவாக்கத்தில் அதிமுகவின் பங்களிப்பை விளக்கிய அவர், மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்கியது அதிமுக. புதிய ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பேருந்து நிலையம் அமைக்கத் தருமபுரம் ஆதீனத்தில் இடம் பெறப்பட்டது. ஆட்சியர் அலுவலகத்திற்கு ரூ.114 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது அதிமுக அரசு.

சீர்காழி உப்பனாற்றில் தடுப்பணை கட்டி மக்களைப் பாதுகாத்தோம். 'நடந்தாய் வாழி காவிரி' திட்டத்தின் கீழ் ரூ.11,600 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. ஆனால், திமுக அந்தப் பணிகளைச் செய்யாமல் முடக்கி வைத்துள்ளது. சீர்காழி புத்தூரில் அரசு கல்லூரி, பூம்புகார் மற்றும் தரங்கம்பாடியில் மீன்பிடி இறங்குதளங்கள் அமைத்தது அதிமுக ஆட்சிதான்.

"போதைப்பொருள் மாநிலமாக மாறிய தமிழகம்"

தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்துப் பேசிய அவர், "இன்று தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை சர்வசாதாரணமாக நடக்கிறது. இளைய சமுதாயம் கஞ்சா மற்றும் போதைக்கு அடிமையாகிச் சீரழிந்து வருகிறது. இரண்டு வயதுக் குழந்தைகள் முதல் பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் அவலம் இந்த திமுக ஆட்சியில் நடக்கிறது. 18,000 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் இன்று தலைகுனிந்து நிற்கிறது," என்று குற்றம் சாட்டினார்.

காவிரி மற்றும் மேகதாது விவகாரம்

"கர்நாடகாவில் மேகதாது அணையைக்கட்டியே தீருவோம் என்று அம்மாநில அமைச்சர்கள் சவால் விடுகிறார்கள். ஆனால், அவர்களைத் தடுக்க நினைக்காத ஸ்டாலின், அவர்களுக்கு ஆதரவாகக் கர்நாடகாவில் பிரச்சாரம் செய்கிறார். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடகு வைக்கும் இந்த ஆட்சி தேவையா?" என்று கேள்வி எழுப்பினார்.

அதிமுகவின் அதிரடி தேர்தல் வாக்குறுதிகள்

மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களை அவர் பட்டியலிட்டார்:

*குடும்பங்களுக்கு நிதியுதவி: ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிமுக ஆட்சி அடைந்தவுடன் ரூ.10,000 வழங்கப்படும். பெண்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை.

* ஒரு பிரிட்ஜ், ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் இலவசம். பொங்கலுக்கு ரூ.1000 மற்றும் தீபாவளிக்கு பெண்களுக்குப் பட்டுப்புடவை.

* விவசாயிகளுக்கான திட்டங்கள்: குறுவை நெற்பயிருக்குக் காப்பீடு திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும். ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

*கால்நடை வளர்ப்பு: விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆடு, மாடுகள் வழங்கப்படும். ஒரு நாளைக்கு 40 லிட்டர் பால் தரும் கலப்பினப் பசுக்கள் வழங்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்.

*மீனவர்கள் நலன்: மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.12,000 ஆக உயர்வு, 500 லிட்டர் டீசல் மானியம் மற்றும் 65 வயது கடந்த மீனவர்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும்.

"மத்திய அரசு வழங்கிய நிதி மற்றும் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தாத திமுக ஆட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இரட்டை இலை மற்றும் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து நமது வேட்பாளர்களைப் பெருவெற்றி பெறச் செய்யுங்கள்" என எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.