அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 26 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக எதிர்கட்சியான அதிமுக தங்களது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை பங்கீட்டு வழங்கி வருகிறது. இதன் படி பாஜகவிற்கு 27 தொகுதிகளும், பாமக 18 தொகுதிகளும், அமமுகவிற்கு 11 தொகுதிகளும், தமாகாவிற்கு 5 தொகுதிகளும், ஐஜேகேவிற்கு 2 தொகுதிகளும், புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. மேலும் சிறிய கட்சிகளுக்கும் ஒரு தொகுதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் தொடர்ந்து நீடித்து வரும் ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்காமல் இருந்து வந்தது.
புதிய நீதிக்கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு
இந்தநிலையில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஏசி சண்முகம் சந்தித்து பேசியிருந்தார். எனவே புதிய நீதிக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது மதுரை மத்திய தொகுதி புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதி கட்சி போட்டி எனத் தகவல் கூறப்படுகிறது. மதுரை வடக்கு தொகுதியை புதிய நீதி கட்சி கோரிய நிலையில் மதுரை மத்திய தொகுதியை ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே புதிய நீதி கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் வழக்கறிஞர் கார்த்தி போட்டியிடுவார் எனவும் கூறப்படுகிறது.
பிடிஆருக்கு எதிராக களம் இறங்கப்போவது யார்.?
இந்த நிலையில் மதுரை மத்திய தொகுதி தற்போது திமுக அமைச்சராக உள்ள பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் களம் இறங்கவுள்ளார். இவர் கடந்த இரண்டு முறை மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போதும் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் களம் இறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே மதுரை மத்திய தொகுதியில் திமுகவை எதிர்த்து அதிமுகவின் ஆதரவு பெற்ற புதிய நீதிக்கட்சி வேட்பாளர் களம் இறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
