"ஜனநாயகத்தை காப்பாத்த கடைசி வாய்ப்பு" 


இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும் 2024 மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது.   அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்கும் முதற்கட்டத் தேர்தல் ஜூன் 1-ம் தேதி 7வது கட்டத்துடன் நிறைவு பெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

  






தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில், "இந்தியாவிற்கான நியாயத்தின் கதவு 2024 மக்களவைத் தேர்தல் மூலம் திறக்கப்படுகிறது. சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகம் மற்றும்  அரசமைப்பைக் காப்பாற்ற மக்களுக்கு கடைசி வாய்ப்பு. வெறுப்பு, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எதிராக நாங்கள் போராடுவோம்" என தெரிவித்துள்ளார். 


காங்கிரஸ்:


தேர்தலுக்கு சரியாக இன்னும் ஒரு மாதங்களே உல்ல நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயத்தில், பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A கூட்டணி தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, காங்கிரஸ் ஸ்கெட்ச் போட்டு வேலை செய்து வருகிறது. 


அந்த வகையில், தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு தேவையான அறிவிப்புகளை இடம்பெற வைக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. இந்தத் தேர்தலுக்கான இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. இதில், ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார். 


அதே நேரத்தில், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும் பிகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார்  I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகியது, எதிர்க்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவை தந்தது. ஆனால், அதன்பிறகு பெரும்பாலான மாநிலங்களில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பது எதிர்க்கட்சிகளுக்கு உத்வேகம் தரும் வகையில் அமைந்துள்ளது.  


மற்ற மாநிலங்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டாலும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மேற்குவங்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் INDIA கூட்டணி கட்சிகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி இந்திய கூட்டணியில் மக்களவைத் தேர்தலை மேற்கு வங்கத்தில் சந்திக்க மாட்டேன் என்று அறிவித்துவிட்டார். இந்தியா கூட்டணியில் இருந்தாலும் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.