திருநெல்வேலி வாக்குமையம்:


திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, பாளையங்கோட்டை,  நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், ஆலங்குளம் ஆகிய தொகுதிக்குட்பட்ட வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை நெல்லை பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதனையொட்டி கல்லூரி வளாகம், கல்லூரியை சுற்றி என ஆயிரக்கணக்கான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தொகுதிக்கு உட்பட்ட திருநெல்வேலி பாளையங்கோட்டை நாங்குநேரி ராதாபுரம் அம்பாசமுத்திரம் மற்றும் ஆலங்குளம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நாளை (04.06.24) செவ்வாய்க்கிழமை ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.


 






பாதுகாப்பு ஏற்பாடுகள்:


திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கார்த்திகேயன் தலைமையில் ஓட்டு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதனையொட்டி அங்கு துணை ராணுவத்தினர், ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். 24 மணி நேரமும் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்திலும், அதன் சுற்றுப்புறத்திலும் நெல்லை மாநகர மற்றும் மாவட்ட போலீசார், தேர்தல் முகவர்கள் மற்றும் கட்சி தொண்டர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். இது தவிர மாவட்டம் முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் 1500 போலீசார் தயார் நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.




இதனையொட்டி கல்லூரி நுழைவு வாயில் தொடங்கி வளாகம் முழுவதும் துணை ராணுவ படையினர் உள்பட 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். மேலும் வளாகம் முழுவதும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணியாளர்களை சட்டமன்ற தொகுதி வாரியாக கணினி வழியில் நியமனம் செய்வது உள்ளிட்ட பணிகள் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடந்து முடிந்துள்ளது.


தொகுதிக்கான சுற்றுகளும், மேஜைகளும்:


முதலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. அதன் பின்னர் காலை 8.30 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் தொடங்கப்பட உள்ளது. மின்னணு தபால் வாக்குகள் எண்ணும் பணிக்கு 1 மேஜையும், தபால் வாக்குகள் எண்ணும் பணிக்கு 6 மேஜைகளும் அமைக்கப்பட்டுள்ளது.  வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்கு சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் அறையில் 14 மேஜைகள் அமைக்கப்படுகிறது.  குறிப்பாக ஆலங்குளம் மற்றும் நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு 23 சுற்றுகளும், அம்பாசமுத்திரம் தொகுதிக்கு 21 சுற்றுகளும், பாளையங்கோட்டை தொகுதிக்கு 20 சுற்றுகளும், நாங்குநேரி, இராதாபுரம் தொகுதிக்கு  22 சுற்றுகளும் என வாக்கு எண்ணிக்கையானது நடைபெற உள்ளது.  ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், நுண் பார்வையாளர் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர் பணிக்கு ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 51 பணியாளர்கள் வீதம் 6 சட்டமன்ற தொகுதிக்கு மொத்தம் 306 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் யார், யார் எந்த தொகுதியில் பணியாற்றுவார்கள் என்றும், எந்தந்த மேஜைகளில் யார், யார் அமருவார்கள் என்பது குறித்த கலந்தாய்வு வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாள் கணினி வழியில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







மையத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள்:


அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்குள்செல்ல முகவர்கள் ரெட்டியார்பட்டி சாலை வாயில் வழியாக செல்ல வேண்டும். அருகில்  இருசக்கர வாகனம், கார், ஜீப் பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியினை பார்வையிட நியமனம் செய்யப்பட்ட முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் காலை 7 மணிக்கு முன்பாக வருகைபுரிய வேண்டும்.  தாமதமாக வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியே சென்றால் மீண்டும் அனுமதி இல்லை. இப்பணியின் போது காலை மற்றும் மதிய உணவு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. மையத்திற்குள் எந்த ஒரு மின்னணு சாதங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது என பல்வேறு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.