தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஷ்ணு பிரசாத், தேமுதிக சார்பில் சிவக்கொழுந்து, பாமக சார்பில் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகன் உட்பட 19 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 

தமிழகம் முழுவதும் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் திரைப்பட இயக்குனருமான தங்கர் பச்சானை கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.



 

கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தங்கர்பச்சானை ஆதரித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார் . அப்போது அவர் கூறுகையில், "இந்த தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப்போவது கிடையாது, திமுக தானே எதிரி எனவே அதிமுக நிர்வாகி பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்" என்று பேசி இருந்தார்.

 

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக கூட்டணி கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு சுமார் மூன்று லட்சம் வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது ‌.

 

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் இயக்குனர் தங்கர்பச்சான் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஈழப் படுகொலையில் என் உறவுகளை கொன்ற காங்கிரசுக்கு வாக்களித்த போகிறீர்களா? அப்படி வாக்களித்தால் நீங்களும் அவர்களோடு கூட்டு என்றும், இந்த முறை அதிமுகவின் வாக்குகளை எங்களுக்கு தான் போட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

 

வட தமிழக மாவட்டங்களில் ஒன்றான கடலூர் வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் வாக்குகள் பெருமளவு உள்ள நிலையில் ஆதிதிராவிடர்கள் பெரும்பான்மையான மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்ன எதிர்பார்க்கப்படுகிறது.

 

எனவே பாட்டாளி மக்கள் கட்சி கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகவின் வாக்குகளை பெறுவதற்கு தீவிர முனைப்பு காட்டி வருகிறது என்பது வேட்பாளர் தங்கர் பச்சான் அவர்களின் பிரச்சாரத்தில் இருந்து தெரிய வருகிறது.