Lok Sabha Election 2024 Phase 1: நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.


102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு:


நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக இன்று தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதில் தேசிய, மாநில கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் ஆயிரத்து 600-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறிப்பாக இதில் 8 மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் ஒரு முன்னாள் ஆளுநரும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இதனால் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளன.   


நட்சத்திர வேட்பாளர்கள்:



  • மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி காண களம் காண்கிறார். 

  • மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அருணாச்சல மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் . 52 வயதான அவர் 2004 முதல் மூன்று முறை அங்கு வெற்றி பெற்றுள்ளார். ரிஜிஜுவை எதிர்த்து அருணாச்சல பிரதேச முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய மாநில காங்கிரஸின் தலைவருமான நபம் துகி களமிறக்கப்பட்டுள்ளார்.

  • மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சர்பனாதா சோனோவால் , அசாமில் உள்ள திப்ருகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

  • உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் தொகுதியில், மத்திய அமைச்சர் சஞ்சீவ் பலியன் போட்டியிடுகிரார்.

  • இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இளைய அமைச்சராகவும் இருந்த ஜிதேந்திர சிங் , உதம்பூரில் ஹாட்ரிக் வெற்றியை இலக்காகக் கொண்டுள்ளார்.

  • மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான பூபேந்திர யாதவ், ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தின் மத்ஸ்யா தொகுதியில் களம் காண்கிறார்.

  • மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், ராஜஸ்தான் மாநிலம் பிகானர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

  • தமிழகத்தின் நீலகிரி மக்களவைத் தொகுதியில் தற்போதைய திமுக எம்.பி.யும், முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சருமான ஆ. ராசாவுக்கு எதிராக, மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான எல்.முருகன் களம் காண்கிரார். 

  • புதுச்சேரி மக்களவை தொகுதி தேர்தலில் முன்னாள் முதலமைச்சரான வைத்தியலிங்கம் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

  • தீவிர அரசியலுக்கு திரும்புவதற்காக தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் அண்மையில் ராஜினாமா செய்தார். தொடர்ந்து,  சென்னை தெற்கு மக்களவைத் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.

  • மேற்கு திரிபுரா தொகுதியில் அம்மாநிலத்தின்  முன்னாள் முதலமைச்சரான பிப்லப் குமார் தேப் களம் காண்கிறார்.