பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் பாகுபலியாய் வீறு கொண்டு எழ, ராமநாதபுரத்தை தேர்வு செய்துள்ளார். இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். நேற்று ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். 



 

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் I.N.D.IA  கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் ஒரு சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வைத்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவரையும்  வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்துள்ளனர்.

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா மேக்கிலார்பட்டியை சேர்ந்த ஒச்சப்பன் என்பவரின் மகனான பன்னீர்செல்வம் என்பவர்தான் அந்த சுயேட்சை வேட்பாளர். உசிலம்பட்டியை சேர்ந்த இவரை திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூர் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் முன்மொழிந்துள்ளனர். சுயேட்சையாக களம் இறங்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தேர்தலில் விழும் வாக்குகளை தடுக்கும் நோக்கத்தில் அவர் பெயர் உடைய ஒருவரை சுயேட்சை வேட்பாளராக அதிமுக-வினர் ஏற்பாடு செய்து களமிறக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

 

தேர்தலில் வெல்வதன் மூலம் தனது பலத்தை நிருபிக்க உள்ளதாக அறிவித்திருக்கும் ஓ.பி.எஸ்சை வீழ்த்த மேலும் சில பன்னீர்செல்வங்களை சுயேட்சை வேட்பாளர்களாக களமிறக்க எதிர்தரப்பினர் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் கசிகின்றன். இதனால் ராமநாதபுரம் தொகுதியில் எத்தனை பன்னீர்செல்வங்கள் களமிறங்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு வாக்களர்களிடையே மட்டுமல்ல அரசியல் கட்சியினரிடையேயும் எழுந்துள்ளது.

 

நேற்று மனுத்தாக்கல் செய்த அதே நேரத்தில், இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸுக்கு ஏற்கனவே உள்ள தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்தாண்டு உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடர்ந்திருந்தார்.



 

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஓபிஎஸுக்கு நிரந்தர தடை விதித்து ஆணையிட்டார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீட்டு மனு  செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள்  ஆர். சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது இரட்டை இலை சின்னத்தை தனது தலைமையில் இருந்த மதுசூதனனுக்கே தேர்தல் ஆணையம் வழங்கியது என்று ஓ.பி,எஸ் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுக தடை விதிக்க கூடாது எனவும் ஓ.பி.எஸ். தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள்அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகிகியவற்றை  பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளனர்.

 

எந்த வகையிலும் ஓபிஎஸ் மீண்டும் எழுந்து விடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள். எத்தனை கோடிகளை வேண்டுமானாலும் செலவழித்து இத்தோடு பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கையை 'எண்டு' க்கு கொண்டு வர வேண்டும் என தீவிரமாக இயங்கும் அவருக்கு எதிரான அணியினர் பக்கா பிளான்னோடு வலம் வருகிறார்கள். இதையெல்லாம் முறியடித்து ஓபிஎஸ்சை 'மீண்டும் மீண்டு' வரச்செய்வார்களா  ராமநாதபுரம் மக்கள்.