இ.பி.எஸ், ஓ.பி.எஸ், தினகரன் ஆகியோர் தனித்தனியாக கடைகளை போட்டுக்கொண்டு எனக்கு போடுங்கள் ஓட்டு என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என ஜோலார்பேட்டையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் எவ.வேலு பேசினார்.

 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மேட்டுச்சக்கர குப்பம் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு இந்திய கூட்டணி சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஜோலார்பேட்டை திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை ஆதரித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர் சி.என். அண்ணாதுரை வேட்பாளராக அறிமுகம் செய்து வைத்தார்.



 

பின்னர் மேடையில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்துள்ளது. இந்த தேர்தல் யார் வரக்கூடாது என்பதற்கான தேர்தல், பாசிசத்திற்கும், ஜனநாயகத்திற்க்கும் இடையே நடைபெறும் தேர்தல். பாசிசம் என்பது பணக்காரன் ஆட்சி செய்வது அவர்கள் சொல்வது தான் நாட்டில் நடக்கும்,  ஆனால் நாம் ஜனநாயக காற்றை சுவாசிப்பவர்கள்..

 

தமிழ்நாட்டில் நடைபெறும் சமூக நீதிக்கும், மனுநீதிக்கும் இடையே நடைபெறும் தேர்தல், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் சமூக நீதி கிடையாது.

 

இந்தியாவில் உயர்ந்த பதவியில் இருக்கும் குடியரசு தலைவர் நாடாளுமன்றத்தை திறக்கவில்லை. ராமர் கோவிலுக்கும் செல்லவில்லை, இது தான் மனுநீதி, ஆனால் ஆதி திராவிடர்களும் கோவில் அறங்காவலர் குழுவில் இருக்காலம் என்று கூறியவர் கலைஞர் இது சமூக நீதி என்று பேசினார்.

 

மேலும், பாஜக இயக்கம் எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது. அதிமுக ஒரு வீணாப்போன கட்சி, ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்,தினகரன் ஆகியோர் தனித்தனியாக கடைகளை போட்டுக்கொண்டு எனக்கு போடுங்கள் ஓட்டு என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

 

விவசாயிகள் விரும்பாத சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது எடப்பாடி வகையறா தான், 10 ஆண்டுகால ஆட்சி, வெறும் ட்ரைலர் என்று கூறுகிறார், இந்த ட்ரைலரிலேயே இதுவரையில்லாத அளவு விலை வாசி ஏறியுள்ளது, இன்னும் முழுபடம் பார்த்தால் நாடு தாங்காது, கேஸ் விலை 2700 ஆக உயர்ந்து விடும், 

 

மோடி குஜராத் முதல்வராக இருக்கும் போது ஒரு பேச்சு பிரதமரான உடன் ஒரு பேச்சு பேசுகிறார்.

குஜராத்தில் ஜி.எஸ்.டியை விடமாட்டேன் என்று கூறி, தற்போது நாட்டில் அனைத்து பொருட்களுக்கும் ஜி.எஸ்.டியை விதித்துள்ளார். அவர் மூன்றாவது முறை வந்தால் 50% ஜி.எஸ்.டி ஆகிவிடும்.



 

மேலும் தமிழகத்தில் 100 ரூபாயை வசூல் செய்து 29 ஆக திருப்பி தருகிறார். ஆனால் பீகார், உத்திரபிரதே மாநிலங்களுக்கு 200 ரூபாய், 290 ரூபாய் என வழங்குகிறார். தமிழ்நாட்டின் வரிப்பணத்தை சுரண்டி பீகாருக்கும், உத்திரபிரதேசத்திற்கும் கொடுக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

 

ஆகையால் இந்த முறை நாம் வெற்றி பெற அனைவரும் சுறுசுறுப்பாக வேலை செய்யுங்கள் என திமுகவினரை கேட்டுக்கொண்டார்.

 

மேலும் இந்த விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தேவராஜ், நல்லதம்பி இந்திய கூட்டணி கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.