நடிகையும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமான குஷ்பு நடப்பு மக்களவைத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதில் இருந்து ஓய்வு அளிக்குமாறு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். 


அதில், ”எலும்பு முறிவு காரணமாக ஏற்கனவே சிகிச்சை மேற்கொண்டு இருந்தேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பிரச்னையுடன் இருந்து வருகின்றேன். இந்நிலையில் எனது மருத்துவர்கள் எனது உடல் நிலையை மனதில் கொண்டு, பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டாம் என அறிவுருத்தினர். ஆனால் வலியுடனே பிரச்சாதத்தில் ஈடுபட்டு வந்தேன். ஆனால் நாளுக்கு நாள் வலி அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது. எலும்பு முறிவு பிரச்னையால் என்னால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர முடியாத நிலையும், நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே எனது உடல் நிலையை கருத்தில் கொண்டு என்னால் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கணத்த இயத்துடந்தான் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். எனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு எனது பிரச்சாரங்களை இத்துடன் நிறுத்திக்கொள்கின்றேன். இதற்கான என்னை மன்னிக்கவேண்டும். பிரச்சாரத்தில் ஈடுபடமுடியாதது மிகவும் மனவருத்தத்தை அளிக்கின்றது. 






தற்போது உள்ள பிரச்னை உயிருக்கு ஆபத்தான நிலை இல்லை என்றாலும், மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொள்ள அறிவுருத்தியதால் என்னால் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நான் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டங்களையும் செய்த சாதனைகளையும் மக்களுக்கு எடுத்துக் கூறி தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன்.


எனது உடல்நிலை குறித்த தகவல்களை நான் கட்டாயம் உங்களுக்கு தொடர்ந்து தெரிவிப்பேன். பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பதை பார்க்க நான் மிகவும் ஆவலாக உள்ளேன். ” இவ்வாறு குஷ்பு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.