கரூரில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு வரும் பணியினை வீடு வீடாகச் சென்று மாவட்ட தேர்தல் அலுலவர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் ஆய்வு செய்தார்.




 


 


 




 


கரூரில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு வரும் பணியினை வீடு வீடாக சென்று மாவட்ட தேர்தல் அலுலவர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுலவர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல், தெரிவித்ததாவது, கரூர் நாடாளுமன்ற தொகுதியில் வருகின்ற 19.04.2024 வெள்ளிக்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 6,89,911 ஆண் வாக்காளர்கள், 7,31,518 பெண் வாக்காளர்கள் மற்றும் 92 இதர வாக்காளர்கள் என மொத்தம் 14,22,228 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். வாக்காளர்கள் வாக்குப்பதிவு நாளன்று தங்கள் வாக்கினை எவ்வித சிரமமுமின்றி வாக்குச்சாவடிகளில் சென்று வாக்களிக்க ஏதுவாக இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள பூத் சிலிப் அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கிடும் வகையில் கடந்த 01.04.2024 அன்று முதல் தொடர்புடைய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கிடும் வகையில் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.


 




 


இப்பணியானது வருகின்ற 13.04.2024 க்குள் முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பூத் சிலிப்புடன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் கையேடு வழங்கப்படுகிறது. இவ்வாக்காளர் கையேட்டில் வாக்காளர் தங்கள் தகவல்களை சரிபார்க்கவும், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதை அறிந்துகொள்ளவும், வாக்களிப்பதற்கான முறைகள் குறித்தும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டி சேவை செயலிகளை எவ்வாறு பயன்படுத்துவது உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் பூத் சிலிப்புகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் மட்டுமே வாக்காளர்களிடம் வழங்கப்படவேண்டுமெனவும், வேறு நபர்களோ அல்லது அரசியல் கட்சி சார்ந்த நபர்கள் மூலமாகவோ பூத் சிலிப்புகள் வழங்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மேலாய்வு செய்து கண்காணித்து உறுதி செய்திட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலுவலர்கள் வாக்காளர்களின் வீட்டுக்கே நேரில் சென்று பூத் சிலிப்புகள் வழங்குவதால் அதனை அக்குடும்பத்தில் உள்ள வாக்காளர் எவரேனும் ஒருவர் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


 




 


அந்த வகையில் பூத் சிலிப் வழங்கப்பட்டு வரும் பகுதிகளில் ஒன்றான கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாந்தோணிமலை, சத்தியமூர்த்தி நகர் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தடா கோவில் மற்றும் தர்கா தெரு ஆகிய பகுதிகளில் இன்றய தினம் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் உரிய அலுவலர்கள் மூலம் மட்டுமே பூத் சிலிப்புகள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவது குறித்து உறுதி செய்யப்பட்டதுடன் குறிப்பிட்டுள்ள கால அளவிற்குள் பூத் சிலிப்புகளை வாக்காளர்களுக்கு விடுபடாமல் வழங்கிட வேண்டுமெனவும் உதவிதேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுலவர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்தார்கள்.


இந்த நிகழ்ச்சியின் போது கரூர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டாட்சியர் முனிராஜ், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டாட்சியர்  வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.