கோவை பீளமேடு பகுதியில் திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “2021 க்கு பிறகு முதல்வர் திட்டங்களால் தமிழ்நாடு முழுவதும் மக்கள் அச்சம் இல்லாமலும், போராட்டம் நடத்த வேண்டிய சூழல் இல்லாமலும் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டிற்கு அரணாக திமுக ஆட்சி இருக்கிறது. பாஜக ஆட்சியில் 10 வருடங்களாக தென்னிந்தியா வஞ்சிக்கப்படுகிறது. அண்ணாமலையை, பாஜகவை பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. வெட் கிரைண்டர் தொழிலுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்தார்கள். தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் திரும்ப தருகிறார்கள். தமிழ்நாடு மீது ஏன் வெறுப்பு?


அண்ணாமலை சொல்வது பொய்


1974 ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது கொங்கு பகுதியை சேர்ந்த 24 சமுதாயங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து வழங்கப்பட்டது. அருந்தினர் இன மக்களுக்கு 3 சதவீத உள் கட ஒதுக்கீட்டை திமுக வழங்கியது. இப்பகுதி இளைஞர்களுக்கு ஆபத்தாக அண்ணாமலை வந்துள்ளார். நான் கோட்டாவில் வந்தவன் அல்ல என அண்ணாமலை சொல்வது பொய். பிற்படுத்தப்பட்டோர் சமுதாய ஒதுக்கீட்டில் தான் அண்ணாமலை படித்து, ஐபிஎஸ் அதிகாரியாக வந்தார். ஆடு மேய்த்தவரை அதிகாரியாக்கி அழகு பார்த்தது திராவிடம். அதிகாரியை ஆடு மேய்ப்பவராக மாற்றியது ஆரியம். அண்ணாமலை ஏழையான குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை. அவரை பண்ணையார் என சொல்ல வேண்டும். அண்ணாமலையை வைத்தே தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை அறிந்து கொள்ள முடியும். அண்ணாமலை நண்பர்களிடம் இருந்து வாங்கிய பணத்திற்கு வரி காட்டுகிறாரா என வருமான வரித்துறை சோதனை செய்ய வேண்டும்.


தமிழ்நாட்டில் தாமரை மலராது


வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து இந்தியா கூட்டணி வெற்றி பெறும். அண்ணாமலை வண்டி டெல்லிக்கு போகாது. இங்கு தாமரை மலராது. மோடி ஆட்சி முடிவுக்கு வர உள்ளது. பாஜக மனித குல எதிரி என தென்னிந்திய மக்களுக்கு தெரியும். வாந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு, பாஜகவிற்கு வாழ்வு தர மாட்டார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்களை இழக்க வேண்டி இருக்கும். திராவிட கட்சிகளுக்கு 85 சதவீதம் வாக்குகள் உள்ளது. 15 சதவீதம் திராவிட எதிர்ப்பு வாக்குகள் உள்ளது. திராவிட சித்தாந்ததிற்கு எப்போதும் ஆபத்து வராது” எனத் தெரிவித்தார்.