Candidate List: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் போட்டியிடும்,  இறுதி வேட்பாளர்களின் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது. 




இறுதி வேட்பாளர் பட்டியல்:


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிட விரும்புபோர் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த 27ம் தேதியுடன் முடிவடைந்தது. அததொடர்ந்து, 28ம் தேதியன்று அந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. பல்வேறு இடங்களில் வாக்குவாதங்கள், குழப்பங்களுக்கு மத்தியில் பல முக்கிய வேட்பாளர்களிடன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. சில நூறு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதைதொடர்ந்து இன்று தொகுதிவாரியாக இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.


எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி?


கடந்த 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெற்ற வேட்புமனு தாக்கலில், மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட  1,403 வேட்பாளர்கள் 1,749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 73 பேரும், அதற்கு அடுத்தபடியாக வடசென்னையில் 67 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். புதுச்சேரியில் 34 வேட்பாளர்கள் 45 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் போட்டியிட  18 வேட்பாளர்கள் 22 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். பரிசீலனைக்குப் பிறகு, தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளில் 1,085 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 27 வேட்பாளர்கள் சமர்ப்பித்த 36 மனுக்கள் ஏற்கப்பட்டன. அதேபோல, விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் 14 மனுக்கள் ஏற்கப்பட்டன. 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.


5 மணியுடன் அவகாசம் முடிகிறது:


பரிசீலனைக்கு முன்னதாகவே சிலர் வேட்புமனுக்களை திரும்பப் பெற்ற நிகழ்வுகளும் அரங்கேறின.  நேற்று புனித வெள்ளி, பொது விடுமுறை என்பதால் மனுக்கள் வாபஸ் தொடர்பான பணிகள் நடைபெறவில்லை. இதையடுத்து தேர்தல் ஆணைய அறிக்கையின்படி, வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அத்துடன், சின்னம் ஒதுக்கப்படாத அரசியல் கட்சிகளான விசிக, மதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னமும் ஒதுக்கப்பட உள்ளன.


அனல் பறக்கும் பரப்புரை:


ஏற்கனவே, அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகிவிட்டால், தலைவர்கள் முழு வேகத்தில் பரப்புரையில் மட்டும் கவனம் செலுத்துவர். அதன்படி, வரும் 17ம் தேதி வரையில் அரசியல் கட்சியினர் பரப்புரையில் ஈடுபடலாம், தமிழ்நாட்டை பொருத்தவரையில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.