மக்களவை தேர்தலை நடத்துவதில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன் 4 சவால்கள் உள்ளன என தேர்தல் நடத்தும் தலைமை ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். அதாவது, ஆள் பலம், பணபலம், வதந்தி, நடத்தை விதிமீறல் ஆகியவை தேர்தல் ஆணையம் முன் நிற்கும் சவால்கள் என அவர் தெரிவித்துள்ளார். 


டெல்லியில் செய்தியாளர்களிடம் தலைமை ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது:


* தன்னார்வலர்கள், ஒப்பந்த பணியாளர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளில் எந்த பாரபட்சமும் இருக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


* பாரபட்சமாக செயல்படும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். 


* மாநில எல்லைகள் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும். வாக்களர்களுக்கு பணப்படுவாடா செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 


* முன் கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமான பயணங்கள் கண்காணிக்கப்படும். 


* பணப்பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பார்கள். 


ஜனநாயகத் திருவிழா: தேர்தல் முன்னேற்பாடுகள்


18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பணிகளில் 1.5 கோடி அதிகாரிகள் ஈடுபட உள்ளனர். 55 லட்சம் தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 10.5 லட்சம் வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ளன. வன்முறை இல்லாமல் மிகவும் அமைதியாக தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் போலி செய்திகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 68,144 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 


இந்த முறை 96.88 கோடி பேர் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை 2.63 கோடி ஆகும். அதேபோல முதல் தலைமுறை வாக்காளர்கள் 1.82 கோடி பேராக உள்ளனர் என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்களவைத் தேர்தல் எப்போது?


நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டுக்கு முதல் கட்டத்திலேயே மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும் 3ஆம் கட்டமாக மே 7ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. நான்காம் கட்டத் தேர்தல் மே 13, 5ஆம் கட்டத் தேர்தல் மே 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதேபோல 6ஆவது கட்டத் தேர்தல் மே 26ஆம் தேதியும் கடைசியாக 7ஆம் கட்டத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது.


வாக்கு எண்ணிக்கை தேதி இதுதான்!


ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதேபோல விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.