நெல்லை மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக தலைமை செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கான்ஸ்டைன் ரவீந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ”நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பிரதமர் மோடி பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து  கொண்டு பேசுகையில், ஊழலற்ற மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒரு  நல்லாட்சியை தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் தருவோம் என குற்ற பின்னணி உள்ள வேட்பாளர் நயினார் நாகேந்திரனை அருகில் வைத்துக் கொண்டு எப்படி பேச முடியும். இது  வேடிக்கையாக உள்ளது. கடந்த 13- ந்தேதி சென்னையில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களிடம் இருந்து பிடிபட்டது. இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு செல்லப்படுவதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் பிடிப்பட்ட நபர்களிடம் நயினார்நாகேந்திரன் விசிட்டிங் கார்டு இருந்துள்ளது. அவர்களும் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் கொண்டு செல்வதாக ஒப்புதல் அளித்துள்ளனர். வேட்பு மனு தாக்கலின் போது நயினார்நாகேந்திரன் அபிடவிட்டில்  தனது சொத்து மதிப்பு 88 லட்சம் என கூறியுள்ளார். எனவே அவரது ஆதரவாளர்களிடம் பிடிக்கப்பட்ட 4 கோடி பணம் கருப்பு பணம் அல்லது கள்ளப்பணம் ஆகும், இது தொடர்பாக அவருக்கு சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. இப்படிபட்ட நபரை அருகில் வைத்துக் கொண்டு மோடி ஊழலற்ற ஆட்சி தருவதாக பேசுகிறார்.


மேலும் பாஜகவின் தலைமை தேர்தல் காரியாலயம் அவருக்கு சொந்தமான ஓட்டல் வாகன நிறுத்தத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைத்துள்ளார்கள். இதுகுறித்து மத்திய மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்ததன் அடிப்படையில்  வாகன நிறுத்தத்தில் தேர்தல் அலுவலகம் அமைத்தது தவறு சட்டப்படி குற்றம் என்றும் உடனடியாக தேர்தல் அலுவலகத்தை  அகற்ற வேண்டும் என  தேர்தல் நடத்தும்  அலுவலர் உத்தரவிட்டு நயினார் நாகேந்திரனுக்கு நோட்டீசும் அனுப்பியுள்ளார். அதுபோன்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு இடத்தை ஆக்கிரமித்து முறைகேடாக  100 கோடி ரூபாய்க்கு நெல்லை மாவட்டம் ரதாபுரத்தில்  வேட்பாளர் நயினார்நாகேந்திரன் புதல்வர் நயினார்பாலாஜி பத்திர பதிவு செய்துள்ளார். இது முறைகேடானது என பத்திரபதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது பிரதமர் பேச்சு முரணாக உள்ளது.  மேலும் மோடி பிரச்சாரம் செய்யும் இடங்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரை கூறுகிறார். இதில் இருந்தே அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் இடையே கள்ள உறவு இருப்பதை உறுதிப்படுத்துகிறார். இதனை திருநெல்வேலி வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 


காமராஜர் பெயரை மோடி கூறுகிறார். 1966- ம் ஆண்டு காமராஜர் பசுவதை தடைச்சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்ததால் டெல்லியில் காமராஜரை மோடியின் முன்னோடிகள் தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சித்ததை மறக்க முடியாது, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் இது போன்ற அரசியல் தலைவர்களை புறக்கணிக்க வேண்டும். திருநெல்வேலி குலவணிகர் புரத்தில் புதிய ஒய் வடிவிலான ரயில்வே பாலம் கட்டுவேன் என தேர்தல் அறிக்கையில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன் அந்தப் பாலம் கட்ட துவங்கும் போது  அதனை தடை செய்ததே அவர்தான். நயினார் நாகேந்திரன் எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. தேர்தலில் அவர் நோட்டாவோடு தான் போட்டியிடுகிறார்” என தெரிவித்தார்.