செல்லூர் ராஜூ மதுரையில் வாக்கு சேகரிப்பு

 

மதுரை நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடக்கூடிய டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானம் பகுதியில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "மக்கள் எல்லோருமே மனமுவந்து அ.தி.மு.க., ஆட்சி வரவேண்டும், அவர்கள் மக்களுக்கு நல்லது செய்த ஆட்சி தான் என்று எண்ணத் தொடங்கி விட்டார்கள். இந்த மூன்று ஆண்டுகளில் அவர்கள் பட்ட வேதனைகளை அவர்கள் புரிந்து இருக்கிறார்கள். விலைவாசி உயர்வு வரி உயர்வு ஒரு பக்கம் மாநில அரசு மறுபக்கம் மத்திய அரசு ஜிஎஸ்டி உள்ளிட்டவைகளால் அனைத்து விளைபொருட்களும் விலை ஏறிவிட்டன.

 

நகைச்சுவையாக இருக்கிறது

 

மத்திய அரசு திட்டங்கள் குறிப்பிட்டுச் சொல்லும் அளவில் மாநிலத்தில் இல்லை. வடமாநிலங்களில் தான்  அவர்களுடைய திட்டங்கள் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளார்கள். திட்டங்கள் என்றால் தொழில் ரீதியாக நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம். கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் ஒவ்வொருவருடைய வங்கி கணக்கில் வரும் என்று சொன்னார்கள். தற்போது அவருடைய நிலை என்ன? பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்று சொன்னார்கள்.  அதனுடைய நிலை என்ன. இதில் நகைச்சுவை என்னவென்றால் நம்முடைய முதலமைச்சர் திமுகவின் தலைவர் அவருடைய தலைமையிலான கூட்டணியில் என்ன சொல்கிறார்கள் பெட்ரோல் டீசல் 75 ரூபாய்க்கு 65 ரூபாய்க்கும் வழங்கப்படும் என்று கூறுகிறார். அதை பார்க்கும் போது நகைச்சுவையாகத்தான் இருக்கிறது.

 

விளையாட்டு வீரன்

 

நானும் ஒரு விளையாட்டு வீரன் தான் பத்தாண்டு காலமாக அமைச்சராக இருந்தபோது விளையாட்டுத் துறைக்கு பல்வேறு திட்டங்களை எல்லாம் நான் கொண்டு வந்தேன். ஆனால் வெங்கடேசன் அவர்கள் முதலில் நல்ல கதை எழுதினார் தற்போது கதை விடுகிறார்.  அதிலும் சரக்கு இல்லை பொதுவாக சரக்கு முறுக்கு செட்டியார் முறுக்கு என்று சொல்லுவார்கள். தற்போது அவரிடத்தில் சரக்கு இல்லை செட்டியார் முறுக்கும் இல்லை. கூட்டணியில் வலுவில்லை மக்கள் அவரை புறக்கணிக்கிறார்கள். சரக்கும் சூப்பர் சரக்கு எங்களது வேட்பாளர் மருத்துவர் சூப்பர் சரக்கு.  தமிழகத்தில் நன்றாக மாட்டிக்கொண்ட ஆடாக (அண்ணாமலை )இருக்கிறார். ஒரு பக்கம் சிங்கம் ஒரு பக்கம் சிறுத்தை இந்த சிறுத்தைக்கும் சிங்கக்கும் இடையே மாட்டிக் கொண்ட ஆட்டுக்குட்டியாக அவர் இருக்கிறார்.  என்ன பேசுகின்றோம் என்பது தெரியாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார். எனவே இதில் வெற்றி பெறப்போவது மக்களுடைய நம்பிக்கையை பெற்ற மக்களுடைய அபரிதமான ஆதரவை பெற்று இருக்கின்ற எங்களுடைய டாக்டர் சரவணன் இரட்டை இலை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

காமராஜர் ஆட்சியை ஏன் கொடுக்கவில்லை

 

மோடி ஜி அவர்கள் ஒரு இடத்திற்கு செல்லும்போது அங்கே இருக்கக்கூடிய மக்கள் யார் வருகிறார்கள் அவர்களுக்கு ஏற்றார் போல் பேசுவதற்காக இருப்பவர்கள் எழுதிக் கொடுப்பதுதான் அவர் ஒவ்வொரு மேடையிலும் பேசுகிறார். அவருக்கு என்ன தெரியும் கடைக் கோடியில் இருக்கக்கூடிய அவருக்கு தென்கோடியில் இருக்கக்கூடியவர்களை பற்றி என்ன தெரியும். பத்தாண்டுகள் ஒரு பாமரனாக நான் கேட்கின்றேன் ஐயா மோடி ஜி அவர்களே.., நீங்கள் தான் பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்தீர்கள்.  ஏன் காமராஜர் ஆட்சி கொடுக்கவில்லை புரட்சித்தலைவர் ஆட்சி கொடுக்கவில்லை எம்ஜிஆர் ஆட்சி கொடுக்கவில்லை என்று மக்கள் கேட்பார்களா இல்லையா?? நாங்கள் கேட்க மாட்டோமா  தற்போது வரை கொடுக்காமல் இருக்கக்கூடிய நீங்கள் இனிமேல் எப்படி கொடுக்க போகிறீர்கள்?? சொன்னதையே செய்யாத நீங்கள் இதை செய்வோம் அதை செய்வோம் என்று மக்களை ஏமாற்றி  வரும் உங்களை எப்படி வேண்டுமென்பார்கள்.

 

 பலாப் பழம் பழுக்காது

 

இங்கே எங்களிடம் எப்படி இருந்தவர் எப்படி இருந்த மனுஷன் இன்றைக்கு பலாப்பழத்தை தூக்கிக்கொண்டு அவர் நிற்கக்கூடிய காட்சியை பாருங்கள் பலாப்பழம் பழுக்காது அழுகித்தான் போகும். உண்மையிலேயே மனசாட்சி இல்லாமல் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக தன்மானம் ரோஷம் எல்லாத்தையும் விட்டுவிட்டு ஓபிஎஸ் போய் ?? அண்ணாமலையை வாக்கு சேகரிக்க வைத்துள்ளார்.