Lok Sabha Election 2024 Date: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், முதல் கட்டட்திலேயே தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


மக்களவைத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு:


தற்போதுள்ள 17வது நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம், வரும் ஜுன் 16ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதற்கு முன்னதாக புதிய மக்களவைக்கான தேர்தல் நடைபெற வேண்டும். அந்த வகையில் 18வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது. இதற்காக தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தலைமையில், புதியதாக தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட சுக்பிர் சிங் சந்து மற்றும் க்யானேஷ் குமார் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கின்றனர். 


டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாலை 3 மணியளவில்  இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. இதில், எத்தனை கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும், வேட்புமனுதாக்கல், வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு தொடர்பான விவரங்கள் வெளியிடப்படும். அறிவிப்பு வெளியானதுமே தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும்.






முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு:


நாடு முழுவதும் சுமார் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் உள்ள சட்டமன்றங்களின் பதவிக்காலமும் வரும்  ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதன் காரணமாக அவற்றிற்கான தேர்தலும் ஒரே அடியாக நடத்தப்படும் என கூறப்படுகிறது.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முதற்கட்ட மக்களவை தேர்தலிலேயே, 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகளுடனான ஆலோசனையின் போது, தமிழ்நாடு அரசியல் கட்சிகளும் ஏப்ரல் இரண்டாவது வாரத்திலேயே தேர்தல் நடத்த வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு, பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வந்து செல்வதும், இதையே உணர்த்துவதாக அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.


அரசியல் கட்சிகள் தீவிரம்:


மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே, கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்களை தேர்வு செய்வது போன்ற பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஆளும் திமுக தலைமயிலான கூட்டணியில், தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான தனித்தனி கூட்டணிகளில், பேச்சுவார்த்தை இன்னும் நீடித்து வருகிறது. விரைவில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்கள் பெயரும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.