தமிழ்நாடு முழுவதும் கடந்த 19ம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக 39 தொகுதிகளிலும் நடைபெற்று முடிந்தது. சென்னையைப் பொறுத்தவரையிலும் மத்திய சென்னை, வட சென்னை மற்றும் தென் சென்னை தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.


வாக்கு மையத்தில் ஆய்வு:


இந்த நிலையில், வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள ராணி மேரி கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், வட சென்னை தேர்தல் பொறுப்பாளர் ரவி தேஜா உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்விற்கு பிறகு ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது, "வாக்கு எண்ணும் மையங்களை இன்று ஆணையருடன் இணைந்து மாவட்ட தேர்தல் அலுவலராக கூட்டாக ஆய்வு செய்தோம். யாராக இருந்தாலும் வாக்கு பதிவு இயந்திரங்கள் இருக்கும் இடத்திற்குள் செல்ல முடியாது. சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட மூன்று தொகுதி வாக்கு எண்ணும் மையத்திலும், சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


104 சி.சி.டி.வி. கேமராக்கள்:


14 மேசைகள் அமைத்து வாக்குகளை எண்ணவும், 16 கேமராக்கள் பாதுகாப்பிற்காக வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளும் அமைக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் முறையான இடங்களில் வைக்கப்பட்டுள்ளதா? என்பதனை ஆய்வு செய்தோம். வட சென்னை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்துள்ள பாதுகாப்பு அறைகளை கண்காணிக்க 104 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.


ஜெனரேட்டர் வசதி:


சிசிடிவி கேமராக்கள் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்ய தடையில்லா மின்சார விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ஜெனரேட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நாளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது."


இவ்வாறு அவர் கூறினார்.


4 அடுக்கு பாதுகாப்பு:


பின்னர், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, "வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் ஒரு பணி நேரத்தில் 140 அதிகாரிகள் காவல் இருக்கின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் தினமும் சரியாக இருக்கிறதா? என்பதை தினமும் எங்களுக்கு ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கப்படுகிறது. நாங்கள் ஆய்வு செய்து அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு கொடுப்போம்."


இவ்வாறு அவர் கூறினார்.


வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாத காலம் இருப்பதால், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களிலும் 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.