கும்பகோணத்தில் தமாகா கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஆதரித்து, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், கும்பகோணம் கரும்பாயிரம் விநாயகர் கோயில், சோலையப்பன் தெரு உள்ளிட்ட தமாகா வேட்பாளர்கள் போட்டியிடும் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பின்னர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நியாயமான முறையில் நடக்க தேர்தல் ஆணையம் தேர்தல் நடவடிக்கைகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும். ஆளும் கட்சியின் அதிகாரம் பணம் ஆள் பலம் ஆகியவற்றை அனுமதிக்கக் கூடாது.


காஞ்சிபுரத்தில்  வேட்பாளர் தற்கொலை சம்பவத்தில் சந்தேகம் அதிகம் உள்ளது இதற்கு விடை காண வேண்டும். தேர்தல் களம் எதிர்க்கட்சிக்கு சாதகமாக உள்ளது. பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது, பல இடங்களில் எதிர்க்கட்சி வேட்பாளர்களில் வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளது, இது தேவையற்ற செயல். இது உள்ளாட்சி தேர்தல், மக்களால் மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யும் தேர்தல் என்பதால் மக்களின் எண்ணங்கள் பிரதிபலிக்கும் வகையில் தேர்தல் நடக்கவேண்டும்.



தமிழக மீனவர்கள் அச்சத்தோடு வாழ்ந்து வருவது வேதனையாக உள்ளது. இலங்கை அரசுடன் இந்திய  அரசு கண்டிப்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், இலங்கை அரசு பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெற இந்தியா பல கோடி டாலர்களை வழங்கி உதவும் நிலையில், இலங்கை அரசு தமிழக மீனவர்களை தாக்குவதையும், படகுகளை ஏலம் விடுவதையும் ஒரு போதும் த.மா.கா ஏற்காது. எனவே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்,அதிகாரிகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.


மத்திய அரசின் நடப்பாண்டு பட்ஜெட், வருங்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும். கொரோனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும். தடுப்பூசி செலுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் காட்டும்  முனைப்பு நோயை கட்டுப்படுத்தி மக்களை காக்கும், இதில் எந்த அரசியலும் இருக்கக்கூடாது. தஞ்சை,  கும்பகோணம் மாநகராட்சிகள் மற்றும் ஒவ்வொரு எம்எல்ஏ., தொகுதிகளும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி பெற்றுள்ளது. தஞ்சை மாவட்டத்திற்கு திமுக ஆட்சிக்காலத்தில் செய்யாததை அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் செய்துள்ளனர்.



குறிப்பாக தஞ்சை மாநகராட்சி அந்தஸ்து, ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் அடங்கும். அதுபோல் கும்பகோணம் மாநகராட்சி வளர்ச்சிக்கு மாநகர அதிமுக செயலாளர் ராமநாதன், முன்னாள் செயலாளர் சேகர் ஆகியோர் அதிமுக ஆட்சிக்காலத்தில் மாநில அரசிடம் கும்பகோணத்திற்கு தேவையான வளர்ச்சியை கேட்டு பெற்று தந்துள்ளனர். . எனவே கும்பகோணம் மாநகராட்சி வளர்ச்சி பெற நகரப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஓட்டு போட்டு பெற்றி பெற்று விட்டால் கண்டிப்பாக அதிமுக, தமாகா நல்லாட்சி கொடுக்கும். எங்களது வேட்பாளர்கள் கும்பகோணத்தில் தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சொன்ன வாக்குறுதிப்படி நிறைவேற்றித் தருவார்கள் என்றார்.