ஐபிஎல் (IPL 2022) தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர். ஏலத்திற்கான அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் தொகையைத் தொடக்க விலையாக 48 வீரர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும், 1.5 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 20 வீரர்களும், 1 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 34 வீரர்களும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில், இன்று தொடங்கிய மெகா ஏலத்தின் முதல் செஷனில் 10 வீரர்கள் எடுக்கப்பட்டனர். அதனை அடுத்து தொடங்கிய இரண்டாவது செஷனில், ஏலம் நடத்திய தொகுப்பாளர் ஹூக் எட்மெட்ஸ் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கீழே விழுந்த தொகுப்பாளரை யாரும் தூக்க வராமல், அங்கிருந்த ஐபிஎல் உரிமையாளர்கள் உட்பட அனைவரும் வேடிக்கை பார்த்து நின்றனர். அதனை அடுத்து, சிறிது நேரத்திற்கு ஐபிஎல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், தொகுப்பாளர் ஹூக் எட்மெட்ஸிற்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
அவர் கீழே விழுந்தவுடன் ஏலத்தில் பங்கெடுத்திருந்த ஷாரூக்கான் மகள் சுஹானா கான், அதிர்ச்சியில் உறைந்தார். மற்றவர்களும் செய்வது அறியாது திகைப்பில் நின்றனர். கொரோனா பரவலால் சமூக இடைவெளிவிட்டு பாதுகாப்பான முறையில் ஏலம் நடைபெற்று வருவதால், தொகுப்பாளர் கீழே விழுந்தபோது யாரும் தூக்க வரவில்லை என தெரிகிறது. இந்நிலையில், தொகுப்பாளர் ஹூக் எட்மெட்ஸூக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இடைவெளி உணவு இடைவேளையாக எடுக்கப்பட்டு விரைவில் ஏலம் மீண்டும் நடைபெறும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்