கரூர் மாநகராட்சி, புலியூர் உப்பிடமங்கலம் புஞ்சை தோட்டக்குறிச்சி, அரவக்குறிச்சி உள்ளிட்ட பேரூராட்சிகளில்  தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கரூர் வட்டாட்சியர்  அலுவலகம் முன்பு பரப்புரையில் ஈடுபட்டு பேசினார். தேமுதிகவை பொருத்தவரை பொய் வாக்குறுதிகளை கொடுப்பதில்லை ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்போம், நகைக்கடன்களை  தள்ளுபடி செய்வோம் என பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றவர்கள் மத்தியில் என்ன செய்வோமோ அதை வாக்குறுதிகளாக கொடுத்து வருகிறோம்.




கரூரில் ஆளுங்கட்சிக்கு வேட்பாளர்கள் இல்லையா என்று தெரியவில்லை மற்ற கட்சி வேட்பாளர்கள் வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுகின்றனர். தமிழகத்தில் எத்தனை கட்சி உள்ளது என கரூரில் உள்ள மந்திரியை கேட்டால் சரியாக சொல்வார் அத்தனை கட்சிக்கும் சென்று வந்தவர் தான் இந்த கரூர் மந்திரி என சொல்லமுடியாது சீக்கிரத்துல தேமுதிகவுக்கு வந்தாலும் வந்துவிடுவார். யாருடைய குறைகளையும் சுட்டிக்காட்டி தேமுதிகவுக்கு ஓட்டு வாங்கும் அவசியம் கிடையாது ஆனால் நடக்கும் அவலங்களை சொல்ல வேண்டியது கடமையாகும்.



மக்களை முட்டாளாக நினைத்து அவர்களின் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக பொய்யான வாக்குறுதி தருபவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பதிலடி மக்கள் கொடுக்க வேண்டும். ஆட்சி அதிகாரம் பணபலம் அதிகாரம் பலம் இருப்பது  என்பதற்காக மக்களை ஏமாற்றிவிடலாம் என கனவு காண்பவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். தேமுதிகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால் தமிழகத்தின் தலை எழுத்தையே கேப்டன் மாற்றி இருப்பார். இன்னும் எங்களுக்கு அந்த வாய்ப்பு உள்ளது எந்த நோக்கத்திற்காக கட்சி ஆரம்பிக்கப்பட்டது அந்த நோக்கத்தை தேமுதிக செய்து முடிக்கும் என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர், பெரு நகர தலைவர் மற்றும் மாநகராட்சியில் போட்டியிடும் 13 வேட்பாளர்களும், அரவக்குறிச்சியில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும், புகலூர் பேரூராட்சியில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும் என மொத்தம் 19 வேட்பாளர்கள் தனி மேடையில் நின்று வாக்கு சேகரித்தனர். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கரூர் மாநகராட்சி தேர்தலில் பிரச்சாரம் செய்வதை ஒட்டி தாலுகா அலுவலகத்தில் பிரத்தியேக மேடை அமைத்து பொதுமக்கள் கவரும் வகையில் ஆட்டம் பாட்டத்துடன் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. பிரேமலதா விஜயகாந்தின் பேச்சைக் கேட்க சாலையில் சென்ற பொதுமக்கள் தங்களது வாகனத்தை நிறுத்தி அவர் பேச்சையும் முழுவதையும் கேட்டு அங்கிருந்து சென்றனர்.