தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று மும்மரமாக நடைபெற்று வருகிறது, நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவையொட்டி காஞ்சிபுரம் மாநகராட்சியில் 50 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு காலை முதலே தொடங்கி அனைவரும் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். அதோடு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாஸ்க் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது,




இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அப்பாராவ் பகுதியை சேர்ந்த லியாகத் ஷெரீப் என்பவரின் மகனான இம்தியாஸ் ஷெரீப் என்பவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இவர் இன்றைய தினம் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டும் என்ற நோக்கோடு அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம்  காஞ்சிபுரம் வந்தார், பின்னர் காஞ்சிபுரத்தில் உள்ள தாமல்வார் தெருவிலுள்ள புனித சூசையப்பர் ஆரம்ப பள்ளி வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று தனது வாக்கினை செலுத்தினார்,




இந்திய குடிமகனான இவர்  அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சலஸ்யில் சொந்தமாக ஐ.டி.கம்பெனி ஒன்றை நடத்தி வரும் நிலையில், தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே,  தான் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து, அதன் மூலம் தனது சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்கு வந்து  வாக்களித்தேன், தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டேன், எனவே அனைவரும் வாக்களித்து  தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் எனவும் இம்தியாஸ் ஷெரீப் கேட்டுக்கொண்டார், இந்திய குடிமகனாக இருக்கும் இவர் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவும், வாக்களிப்பது நமது கடமை என்பதாலும் அமெரிக்காவில் இருந்து வந்து வாக்களித்து விட்டு சென்றது அனைவரின் பாராட்டையும் பெற்றது